குற்றாலநாத சுவாமி கோவிலில் சித்திரை தீர்த்தவாரி


குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் நேற்று சித்திரை விசு தீர்த்தவாரி நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை விசு திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடந்தன. இரவில் சுவாமி - அம்பாள் வீதி உலாவும் நடைபெற்றன. கடந்த 9-ந் தேதி தேரோட்டம் நடந்தது. கடந்த 12-ந் தேதி சித்திரை சபையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடந்தது.
திருவிழாவின் கடைசி நாளான நேற்று காலை சித்திரை விசு தீர்த்தவாரி நடந்தது. காலை 10.30 மணிக்கு மெயின் அருவியில் சுவாமி- அம்பாள் தீர்த்தவாரியும், அதன்பிறகு சுவாமி வீதி உலாவும் நடந்தது. தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Leave a Comment