மதுரைக்கு நிகரான பரமக்குடி சித்திரை திருவிழா...!


பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ பூப்பல்லாக்கில் அரக்கு பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில்  இறங்கினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் பரமக்குடி வைகை ஆற்றில் இறங்கிய விழா விமரிசையாக நடைபெற்றது.

 இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அழகரை வரவேற்றனர். ஆண்டுதோறும் சித்திரைப் பெளர்ணமி நாளில் கள்ளழகர் ஆற்றில் பூப்பல்லக்கில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

 இதையொட்டி பரமக்குடி அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம்  கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களின் இரவில் சுந்தர்ராஜ பெருமாள் ஆடி வீதிகளில் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பல்வேறு மண்டகப்படிகளில் தங்கி அருள் பாலித்த சுந்தர்ராஜ பெருமாள் இன்று அதிகாலை வான வேடிக்கைகள் மற்றும் மேலாளங்கள் முழங்க பூப்பல்லக்கில் ஏராளமான தீவட்டிகள் முன்செல்ல கள்ளழகர் அரக்கு பட்டு உடுத்தி  வெள்ளி கிண்ணத்தில் அவல் பாயசம் சாப்பிட்டுக்கொண்டு  கொண்டு பரமக்குடி வைகை ஆற்றில் இறங்கினார்.



Leave a Comment