திருமங்கலம் சத்திய யுக சிருஷ்டி திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா...


மதுரை திருமங்கலம் சத்திய யுக சிருஷ்டி திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருமங்கலம் அருகே சத்ய யுக சிருஷ்டி திருக்கோவிலில் வெங்கடாசலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள் திருக்கோவில்களுக்கு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையம் கிராமத்தில் முக்தி நிலைய அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்ட 108 தெய்வங்கள் உள்ள சத்திய யுக சிருஷ்டி திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத திருப்பதி வேங்கடாசலபதி பெருமாள் திருக்கோவில் விமானத்திற்கும் ஆண்டாள் திருக்கோவில் விமானத்திற்கும் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

முதல் கால யாக சாலைபூஜை நேற்று மாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, இன்று காலை யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கலசத்திற்கு சிறப்பு பூஜையுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடங்கி பூரணாகதியுடன் யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றது.

தொடர்ந்து புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவில் வளாகத்தை சுற்றி வந்து திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோவில் பத்மாவதி தாயார் திருக்கோவில் ஆண்டாள் திருக்கோவில் கோபுர கலசங்களுக்கு மேளதாளங்கள் முழங்க புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

தொடர்ந்து வேங்கடாசலபதி பெருமாள், பத்மாவதி தாயார், ஆண்டாளுக்கு அலங்கார ஆராதனை நடைபெற்றது. விழாவில் ராயபாளையம், மேலக்கோட்டை, சமத்துவபுரம், காமாட்சிபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.



Leave a Comment