வழிவிடு முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா


ராமநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற வழிவிடு முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி உள்ளது. அதனை தொடர்ந்து வழிவிடு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.

விழாவையொட்டி தினமும் ஆன்மிக சொற்பொழிவு, பாராயணம், இசை சொற்பொழிவு, வாரவழிபாடு போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 13-ந்தேதி இரவு 7 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். அதனை தொடர்ந்து 14-ந்தேதி காலை 11 மணிக்கு மேல் வழிவிடு முருகன்-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.

இதேபோல ராமநாதபுரம் அருகே உள்ள பெருவயல் கிராமத்தில் அமைந்துள்ள ரணபலி முருகன் கோவிலில் நேற்று மாலை 5 மணியளவில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை போன்றவை நடைபெற்றது. 13-ந்தேதி மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், 14-ந்தேதி காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.



Leave a Comment