குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கியது...


இந்தியாவில் மைசூருக்கு அடுத்த படியாக தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.

இங்குள்ள அருள்மிகு ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று 26-ம் தேதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.  அதனைத் தொடர்ந்து காலை 9.35 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
மதியம் முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடைபெறும்.

விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிசாசூரசம்ஹாரம்,  10-ம் திருநாளான வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு குலசேகரபட்டிணம் கடற்கரையில் நடக்கிறது.

விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்  திரளான பக்தர்கள் செவ்வாடை அணிந்து கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.  கொடியேற்றத்தை தொடர்ந்து, பல்வேறு நாட்களாக விரதம் இருக்கும் பக்தர்கள் தங்களது கைகளில் மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிகின்றனர்.

பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, 20 ஆம் நாள் விழா நிறைவில் கோவிலில் செலுத்துகின்றனர். திருவிழாக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.



Leave a Comment