பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் அழகர்....


சித்திரை திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வாக மதுரை வைகையாற்றில் அழகர் இன்று இறங்கினார். வைகை ஆற்றில் இறங்கிய அழகரை கைகளில் தீபம் ஏந்தி ஏராளமான பக்தர்கள் வரவேற்றனர். அப்போது கோவிந்தா கோவிந்தா என்ற பக்தர்களின் கோஷத்தால் வான் அதிர்ந்தது. கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சித்ரா பெளர்ணமி தினமான இன்று நடைபெற்றது. இதனையொட்டி வைகை ஆற்றில் மக்கள் வெள்ளம் நிறைந்து காணப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசிக்க மதுரையில் திரண்டனர். ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து, பட்டுடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா மதுரை மக்களுக்கு இன்னொரு தீபாவளி போன்றது. அழகர் ஆற்றில் இறங்கும்போது அவர் அணிந்து வரும் உடையை பொறுத்தே அந்த ஆண்டில் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் ஊகிக்கப்படும். கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வந்தால் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு அழகர் பச்சைபட்டுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் பவனி வந்தார். ஆற்றில் இறங்குவதற்காக மதுரை வந்த அழகருக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர் சேவையுடன் உற்சாக வரவேற்பளித்தனர். வைகையில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக அழகர்மலையில் இருந்து தங்கப் பல்லக்கில் நேற்று முன்தினம் இரவு 7.45 மணிக்கு அழகர் மதுரை புறப்பட்டார்.

நேற்று அதிகாலை மதுரை மூன்றுமாவடியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்சேவையுடன் அவரை வரவேற்றனர். தொடர்ந்து நேற்றிரவு தல்லாகுளம் பெருமாள் கோயில் வந்தார். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கிளி பரிவட்டம் உள்ளிட்டவைகள் அணிந்துதான் வைகை ஆற்றில் கள்ளழகர். அதன்படி இரவு திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் அமர்ந்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலையை அணிந்து கிளி பரிவட்டம் உள்ளிட்வைகளை உடுத்தி கொண்டு பக்தகோடிகளுக்கு கள்ளழகராக காட்சியளித்தார். முன்னதாக ஸ்ரீ ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை கிளி மற்றும் பரிவட்டம் ஆகியவைகளை திருக்கோவிலின் சார்பில் ஸ்தானிகர் பெற்று கொண்டு நான்கு மாட வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மதுரைக்கு சென்றார். முன்னதாக ஆற்றுக்கு செல்லும் வழியில் அழகர், வெட்டிவேர் சப்பரத்திலும், பின்னர் மைசூர் மண்டபத்தில் ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளினார். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் இறங்கினார். ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு, பச்சை பட்டு உடுத்தி அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதனை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்தனர்.



Leave a Comment