லட்சுமி தாயாருடன் அருள்பாலிக்கும்...பரிக்கல் நரசிம்மர்!


விழுப்புரம் மாவட்டம் பரிக்கல் பகுதியில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் திருக்கோயில். பொதுவாக நரசிம்மர் கோயிலில் உக்கிர மூர்த்தியான நரசிம்மர் தன் மடியிலுள்ள மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்திருப்பார். ஆனால் இந்தியாவிலேயே இக்கோவிலில் மட்டும் தான் நரசிம்மரை லட்சுமி தாயார் தன் வலக்கையாலும், லட்சுமி தாயாரை நரசிம்மரும் ஆலிங்கனம் செய்தபடி அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயிலில் தினசரி ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் 10.30 மணி வரை திருமஞ்சனம் நடைபெறும். பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு இந்த திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

ஒரே வரிசையில் உள்ள மூன்று லட்சுமி நரசிம்மர் ஆலயங்களில் தினமும் திருமஞ்சனம் நடத்தப்படுவது பரிக்கல்லில் மட்டும் தான். இந்த திருமஞ்சனத்தை நேரில் பார்ப்பது மிகவும் நன்மை தரக்கூடியதாக கருதப்படுகிறது.இந்த திருமஞ்சனத்துக்கு பக்தர்கள் பொருட்கள் வாங்கி கொடுக்கலாம். பால், தயிர், வாசன திரவியங்கள் போன்றவற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாங்கிக்கொடுக்கலாம்.

இந்த திருமஞ்சனத்தை பார்ப்பதற்காகவே சில பக்தர்கள் காலை நேரத்தில் பரிக்கல் ஆலயத்துக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். சென்னை மற்றும் தொலைதூரங்களில் இருந்து மூன்று லட்சுமி நரசிம்மர் ஆலயங்களையும் தரிசிக்க வருபவர்கள் இந்த திருமஞ்சனத்தை பார்க்கவேண்டும் என்பதற்காகவே பரிக்கல் ஆலயத்தை முதல் ஆலயமாக தேர்ந்தெடுத்து வழிபட்டு வருகிறார்கள்.



Leave a Comment