கடன் தீர்க்கும் இறைவர்


கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினை தீர திருச்சேறை ஸ்ரீரிணவிமோசன லிங்கேஸ்வரரை சரணடையுங்கள். நோயற்ற வாழ்வு எவ்வளவு முக்கியமோ அதே போல கடனில்லாத வாழ்வு வாழ்வதும் மிகவும் முக்கியம்.

திருச்சேறை என்ற இடத்தில் உள்ளது சாரபரமேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலய இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர், உடையவர் என்பன இறைவனின் பிற பெயர்கள். இறைவியின் பெயர் ஞானாம்பிகை.

இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வமாகவும், எல்லா வகை கடன்களையும் நிவர்த்திசெய்கின்ற கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகவும் ஸ்ரீரிணவிமோசன லிங்கேஸ்வரர் தனிசன்னதி கொண்டு உள்ளார்.

ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள்.


தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை. கடன்நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் ஒரே சன்னதியில் சிவ துர்க்கை,விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவ துர்க்கை என 3 துர்க்கைகள் அருள்பாலித்து வருகின்றனர்.

கடன் தீர்க்கும் இறைவர்
இத்தலத்தில் பரிகார தெய்வமாக ரிண விமோசன லிங்ககேஸ்வரர் விளங்குகிறார். மார்க்கண்டேய முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அந்த மார்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ரிண விமோசன லிங்கேஸ்வரர்.


சிவனுக்கு அபிஷேகம்
பொதுவாக மனிதனாகப் பிறந்தவருக்கு பிறவிக்கடனும், இப்பிறவியில் பொருள் கடனுமாக இரண்டு கடன் உண்டு. ரிண விமோசன லிங்கேஸ்வரரை முறையோடு வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்து விடுபடலாம். எனவே இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் என போற்றப்படுகிறார். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.


அஷ்டமியில் பைரவர்
தேவார பாடல் பெற்ற பைரவ சன்னதியும் உள்ளது. இங்குள்ள பைரவரை தொடர்ந்து எட்டு அஷ்டமி திதியில் அர்ச்சனை செய்து வழிபட்டு, ஒன்பதாவது அஷ்டமி திதி அன்று பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபட்டால் வேண்டியது நிறைவேறும்.


எப்படி செல்வது
மகாபாரதத்தில் எரியும் அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்கள் வெளியேற யுத்திகள் கூறியவரும், குந்திதேவிக்கு உபதேசம் செய்தவருமான தவுமிய மகரிஷி இத்தலத்தில் மோட்சம் பெற்றதாக வரலாறு. கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்ப கோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு செல்ல கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.



Leave a Comment