நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய...


நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 2018ஆம் ஆண்டுக்கான தினசரி அபிஷேக முன்பதிவு தொடங்கியது. புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு நாள்தோறும் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் 1008 வடைமாலை, வாசனைத் திரவியங்களைக் கொண்டு அபிஷேகத்துக்கு செய்யப்படும் செலவை பக்தர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். தற்போது ஒரு நாளுக்கான செலவை 5 பக்தர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டுக்கான அபிஷேகத்துக்கான முன்பதிவு கோயில் செயல் அலுவலர் ரமேஷ் முன்னிலையில் கோயில் வளாகத்தில் தொடங்கியது. 2018ஆம் ஆண்டின் சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாள்கள் மற்றும் சிறப்பு வாய்ந்த நாள்களுக்கு ஒரே நாளில் முன்பதிவு முடிவடைந்துவிட்டது. இதுவரையில் 640 பேர் தினசரி அபிஷேகத்திற்கு பதிவு செய்துள்ளனர். இதர நாள்களுக்கு முன்பதிவு தொடர்ந்து நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



Leave a Comment