ரிஷபம்


சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் வல்லவரான ரிஷப ராசி அன்பர்களே நீங்கள் நேரத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். மற்றவர்களும் நேரத்தை சரியான முறையில் கையாள வேண்டும் என எண்ணுபவர்கள். குடும்பத்தின் கௌரவத்தை காப்பாற்றுவதில் கவனமாக இருப்பீர்கள்.

 உங்களின் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு சஞ்சரிக்கும் குரு பகவானால் உங்களின் வாக்கு வன்மையில் பிரச்சனை வரலாம். மற்றபடி உங்களின் ஆன்மிக சிந்தனைகள் மெருகேறும். புதிய ஆலயங்களைத் தேடிச் சென்று வழிபடுவீர்கள். குடும்பத்தின் வளர்ச்சியில் உங்களின் பங்களிப்பு பெருகும். உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் அனுசரித்து நடந்துகொள்வீர்கள். அதேநேரம் எவரிடமும் அனாவசிய பேச்சு வேண்டாம். மற்றவர்களின் பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்து அதற்கேற்ப உங்களின் செயல்பாடுகளை வகுத்துக்கொள்ளவும்.

 புதுப்புது ஆராய்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். திடீரென்று தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் நிலைமை உருவாகும். உடல் ஆரோக்யத்தில் எந்தக் குறைபாடும் ஏற்படாது. யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்து உடல் நலத்தையும், மன வளத்தையும் பெருக்கிக் கொள்வீர்கள். செய்தொழிலில் படிப்படியான வளர்ச்சி ஏற்பட்டு பொருளாதார நிலை உயரும். போட்டியாளர்கள் பின் வாங்குவார்கள். அரசு வகையில் சில சலுகைகள் தேடி வரும்.

 மனதில் ஏற்பட்ட இனம் புரியாத வேதனைகளும், பயங்களும் முற்றிலும் நீங்கிவிடும். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களின் குறைகளைக் கண்டறிந்து தயவு தாட்சண்யமின்றி திருத்துவீர்கள். உங்களின் செயல்களுக்கு நண்பர்கள், கூட்டாளிகளிடம் வரவேற்பு கிடைக்கும். பெரியோரைத் தேடிச் சென்று அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். நேர் வழியில் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.

 எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கும். உங்களின் முடிவுகளை பயமின்றி செயல்படுத்துவீர்கள். குடும்பத்தினரை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். போட்டியாளர்கள் உங்களை ஏமாற்ற முடியாது. உங்களின் நெடுநாளைய ஆசை ஒன்று இந்தக் காலகட்டத்தில் பூர்த்தியாகும். உங்களின் தெளிந்த சிந்தனைகளால் பிறருக்கு தகுந்த அறிவுரைகளை வழங்குவீர்கள். உங்களைச் சார்ந்தவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பீர்கள்.

 வெளிநாடு விசா குறித்த சந்தேகத்தில் இருந்தவர்களுக்கு ஆச்சரிப்படும் வகையில் விசா கிடைத்துவிடும். காணாமல் போயிருந்த பொருட்கள் மீண்டும் கை வந்து சேரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

 உத்யோகஸ்தர்கள் இந்த பெயர்ச்சியின் காரணத்தால் ஓரளவுக்கு முன்னேற்றம் காண்பார்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். அதேநேரம் வேலைப் பளு அதிகரிக்கும். எனவே பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்துகொள்ளுங்கள். அலுவலக ரீதியான பயணங்களைச் செய்ய நேரிடும்.

 வியாபாரிகளுக்கு தொடர்ச்சியான லாபம் கிடைக்கும். அதிக முதலீடு செய்யாமல் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். போட்டிகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உபரி வருமானத்தை எதிர்காலத்திற்காக சேமித்து வைப்பீர்கள். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டு அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கட்சித் தொண்டர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்கள் செயல்களைச் செய்து நற்பெயர் வாங்குவீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உயரும்.

 கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கும். எனவே வாய்ப்புகளை நன்கு ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டிவரும். சக கலைஞர்களின் உதவிகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.

 பெண்மணிகளின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். திருமணம் தடைபட்டவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் திருமணம் நடக்கும். உத்யோகமும் கிடைக்கும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். முக்கியப் பிரச்னைகளில் மௌனம் சாதித்து பிரச்னைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளவும்.

 மாணவமணிகள் படிப்பில் அலட்சியம் காட்டாமல், திட்டமிட்டபடி படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சிக்கவும். மற்றபடி உங்கள் படிப்புக்கு அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த மானியங்கள் கிடைக்கும்.

 கார்த்திகை:

இந்த குருப் பெயர்ச்சியால் குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.  திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும்.  கணவன்,   மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும்.  பிள்ளைகளுக்காக  செய்யும் பணிகள் திருப்தி தரும்.    அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன்  இருந்த  தகராறுகள் நீங்கும். 

 ரோகினி:

இந்த குருப் பெயர்ச்சியால் நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி  கவலைப்படாமல்  செயலாற்றுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள்  நீங்கும். திறமை வெளிப்படும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை  நீங்கும்.

 மிருகசீரிஷம்:

இந்த குருப் பெயர்ச்சியால் எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால்  இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து  எதிர்பார்த்தபடி  இருக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள்  கிடைக்க பெறுவீர்கள்.

 பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வரவும்.  “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9



Leave a Comment