சித்தர் பிரான்களின் திவ்விய சரித்திரம் - தன்வந்திரி


- "மாரி மைந்தன்" சிவராமன்

 

ஆயுள் வேதமே ஆயுர்வேதம்.

ஆயுர்வேதம் 
ஓர் 
இயற்கை மருத்துவம்.

சித்த மருத்துவம் 
தமிழின் கொடை. அகத்தியர் பெருமானே ஆதார நாயகன்.

அகத்தியரும் 
தேரையரும் 
யூகி முனிவரும்
சித்த மருத்துவத்தை
அதிகமாய் அருளினார்கள்.

ஆயுர்வேதத்தின் பிதாமகன்
தன்வந்திரி.

அகத்தியர் 
வடநாட்டவர். 
தமிழ் கற்று சித்தமருத்துவம் அருளினார்.

தன்வந்திரி 
தமிழ் நாட்டவர். 
வடமொழிப் புலமையில் வடநாட்டினரை
விஞ்சியவர்.

தமிழின் 
சித்த வைத்தியத்தை வடமொழியில் வழங்கி 'தன்வந்திர்'
என்ற 
நிகண்டாக்கினார்.

அந்நூலை 
அருளியதாலேயே
தன்வந்திரி 
என்ற 
காரணப் பெயரும் பெற்றார்.

வாகட நூலில் வல்லவரான 
தன்வந்திரி மகாவிஷ்ணுவின் அம்சம்.

மகாவிஷ்ணுவின் 
மறு அவதாரமே தன்வந்திரி என்பார் 
சில ஆய்வர்.

தன்வந்திரியின்
பிறப்பு பற்றி 
சில சுவையான குறிப்புகள் உண்டு.

தேவர்களும் 
அசுரர்களும் 
பாற்கடலைக் கடைந்தபோது 
அமுத கலசத்துடன் அவதரித்தார் 
தன்வந்திரி 
என்கிறார் 
போகர் பெருமான்.

தீர்த்ததமர் 
என்பவரின் 
மகனாய் பிறந்தவர். 

காசிராஜன் 
புதல்வராகத் தோன்றினார்.

தீர்த்தப்பசு 
என்பவரின் 
திருமகனே 
தன்வந்திரி. 
அப்பிறப்பில் 
அவர் பெயர் 
சேதுமான்.

சேதுமான் தான் சுச்சுருதருக்கு ஆயுர்வேதம் உபதேசித்தவர்.

இவ்விதம் கூட பல 
பிறப்புக் குறிப்புகள் உலவுகிறது..

தன்வந்திரியின் 
மகன் 
சேதுமான் 
என்று 
அடித்துச் சொல்கிறது அபிதான சிந்தாமணி.

அனு 
என்ற அரசனின் வாரிசாகப் பிறந்து 
பரத்பாசரிடம் 
ஆயுர்வேதம் கற்று 
அதை 
எட்டு வகையாகப் பிரித்து உபதேசித்தார்
என்றும் கூறுகிறார்கள்.

இவ்விதம் 
பலவித பிறப்பும் 
பற்பல செய்திகளும்
பரவிக் கிடக்கின்றன.

அகத்தியர் பெருமான் 
ஒருபடி மேலே போய் தன்வந்திரி
விஷ்ணு பகவான் தான் எனச் சத்தியம் செய்கிறார்.

முற்பிறப்பில் விஷ்ணுபிரானாக
வலம் வந்ததால்...
மனிதனாகப் பிறந்ததே ஆயுர்வேதத்தை அகிலத்திற்கு
அளிக்கத் தானாம்.

அவர் தந்தை 
தம்புராவுடன் 
பாடிச் சென்று 
யாசகம் பெற்றே தன்வந்திரியை வளர்த்தார்.

தந்தையே சகல சாஸ்திரங்களையும் கற்பித்தார்.

18 சித்தர்களும் தன்வந்திரிக்கு உபதேசித்துள்ளார்கள்.

மூன்று லட்சம்
கிரந்தங்களையும் சித்தர்கள் 
உபதேசித்தனர்.

அதனால் 
ஞானம் பெற்று ஞானியானார் 
தன்வந்திரி.

தன்வந்திரி 
சூரியன் போல் பிரகாசித்தார் 
என்கிறார் 
அகத்தியர் பெருமான்.

இது 
சித்தரர்களுக்கான
சித்த அடையாளம்.

ஒரு கையில் 
கமண்டலம்.
மறு கையில் 
கதை. 
இதுவே 
தன்வந்திரியின்
தவக் கோலம்.

விக்கிரமாதித்தன் சபையில் 
'நவரத்தினம்'
என்ற பட்டம் பெற்றவர்.
பண்டிதர் குழுவில் பணியாற்றியதாகவும் 
செய்தி உள்ளது.

தன்வந்திரி 
அருளிய நூல்கள் வைத்திய சிந்தாமணி வைத்திய காவியம் 
நூறு கண்ட ஞாலம் 
கலை ஞானம் 
ஜெயம் தைலம் 
சிமிட்டு ரத்தினச் சருக்கம் கருக்கிடை 
நிகண்டு 
வைத்தியம் 
தண்டதம் 
கருடாரூடம் 
செயநீர் 
மூப்பு சூத்திரம் 
உள்ளிட்ட பல.

ஐப்பசி மாதம் 
புனர்பூசம் 
4 ஆம் பாதத்தில் அவதரித்தவர் 
தன்வந்திரி.

அவர்
800 வருடம்
32 நாட்கள் 
வாழ்வாங்கு வாழ்ந்தார்.

தன்வந்திரி 
பற்றிய 
தகவல்கள் குறைவே.

வைத்தீஸ்வரன் கோயிலில் 
தன்வந்திரி 
லயமானார் 
என்கிறது ஓர் ஆய்வு.

கோரக்கரின் குறிப்பு 
தன்வந்திரிக்கு 
60 மனைவிகள் 
160 மக்கட் செல்வங்கள் என வியக்க வைக்கிறது.

எண்ணற்ற 
கோயில்களில் தன்வந்திரிக்கு 
பிரதான இடமுண்டு.

அவற்றில் 
தீராத நோய் தீர்க்கும் தெய்வமாக 
காட்சி அளிக்கிறார்
தன்வந்திரி சித்தர்.

எந்தவித நோயையும் தீர்க்கும் 
சிறப்பு மருத்துவரே-
ஸ்பெஷலிஸ்ட்டே
தன்வந்திரி...
என்று துதிக்கிறார்கள் 
பாதிப்புகள் நீங்கி பயன்பெற்ற
பக்தகோடிகள்.

மரணமிலா பெருவாழ்வுக்கு
வழிகாட்டும் 
மகா சித்தர் 
என்று தொழுகிறது
ஆன்மீக உலகம்.
 



Leave a Comment