கணக்கில்லா ஆயுள் கொண்ட காகபுஜண்டர்


- "மாரி மைந்தன்" சிவராமன்

தேவேந்திரன் 
சபை....

அதோ....
 நாரதர்.
 இதோ....
 வசிஷ்டர்.

தவத்தில் சிறந்த உலகில் உயர்ந்த 
தவ ராஜாக்கள் நிறைந்த சபை.

ஞானம் நிறைந்த 
ஒரு மகரிஷியின் உரை.

அவர் 
திருநாமம் 
சதாதபர்.

எல்லோரும் 
கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

தலைப்பு:
சிரஞ்சீவிகளாக இருப்பவர்களின் திவ்விய சரித்திரம்.

சதாதபரின் 
சத்சங்கம் 
களை கட்டிக் கொண்டிருந்தது.

"மெய் அன்பர்களே !

என்னினும் உயர்ந்த ஞானிகளே !

மாமேருவின் 
உச்சியில் 
காட்சிக்கினிய
ஒரு கற்பக மரம் உள்ளது.

அம்மரத்தின் 
உச்சியில் ஒரு 
பெரிய கூடு உள்ளது.
 
அக்கூட்டில் ஒரு 
பெரிய காகம் உள்ளது.

அதன் பெயர் புஜண்டர். அதை 
காகபுஜண்டர் 
என்று அழைக்கிறார்கள்.

ஒரு சாபத்தின் காரணமாக 
காகமான 
ஞானசித்தர் அவர்.

அவரை ஒத்த ஞானநிலை கொண்டவர்
எங்கும் இல்லை.. எவருமில்லை.

அளவிட முடியாத ஆயுளைக் கொண்டவர் உரோமர்.

அவரின் குருவே காகபுஜண்டர்.

 எல்லையற்ற ஆயுள் விரிந்த அறிவு
முக்கால ஞானம் கொண்ட 
சிரஞ்சீவி காகபுஜண்டர்.

சதாதபர் பேசப் பேச 
அவர் முகம் 
ஒளி மிகுந்து பிரகாசித்தது.

அவர் சொல்வதைக் கேட்க கேட்க கேட்பவரின் முகத்திலும் ஒளிவெள்ளம் படர்ந்தது.

சித்தர்கள் குறித்து பேசுபவர் உள்ளம் பூரிப்பதும் 
கேட்பவர் உள்ளம் குதூகலிப்பதும் இருதரப்பு முகங்களும் பிரகாசிப்பதும் இயற்கையே.

அது இறையருள் வகுத்த  நீதி.. நியதி.

காகபுஜண்டரின் பெருமைகளை
சதாதபர் 
சொல்லிக்
கொண்டிருக்கும் போதே 
வசிஷ்டருக்கு 
நிலை கொள்ளவில்லை.

உடனே அவரைப் பார்க்க 
தரிசிக்க 
ஆவல் கொண்டார்.

 அவதார புருஷர் இராமபிரானின் 
ஞான குருவான வசிஷ்டர் 
அக்கூட்டம் 
முடிந்த கையோடு 
மேருமலை விரைந்தார். 

மேருமலை மலைகளாலும் குகைகளாலும் 
மரம் செடி கொடிகளாலும் நிறைந்து
ஓர்
அருட்தவ
ஞானியைப்
போல் 
விஸ்வரூபமாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது .

அங்கு 
பறவைகளின் கானங்கள் கூட சிவமயமாய் 
சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தன.

வியந்தபடி 
ரசித்தபடி 
வசிஷ்டர் 
கற்பகமரம் தேடி அலைந்தார்.

"வாருங்கள் வேதவல்லுனரே ! ஈடில்லாத மாமுனியே !!"

காக ரூபத்திலிருந்த காகபுஜண்டர் வரவேற்றார்,

" பறவைகளின் அரசே !

உங்களைப் பற்றித்தான் தேவலோகத்தில்
ஒரே பேச்சு 

அப்பப்பா....
எத்தனை கால வாழ்க்கை...! மரணமிலாப் பெருவாழ்வு....!

எத்தனை பிறவி ! எத்தனை அனுபவ ஞானம் !
இருந்தும் எவ்வளவு அமைதி...!!!

கர்வமற்ற
காகபுஜண்டரே !

உம்மைப் பற்றி 
நிறைய அறிய 
ஆவல் கொண்டே நேரில் வந்தேன்.

உங்கள் ஆயுட்கால அனுபவத்தை ஞானத்தை தத்துவத்தை 
அறியவே  வந்துள்ளேன்"

ஞான நிலையின் உச்சத்திலிருந்த 
ஞானமுனி
வசிஷ்டர் கேட்க 
கற்பகத் தருவின் உச்சியில் இருந்த காகபுஜண்டர் தலையசைத்தார்.

அவர் சொன்ன பதில்களால் 
எதற்கும் 
அசையா 
வசிஷ்ட ரிஷியே அசைந்தார்.

அவர் சொன்ன சுயவரலாறு 
கேட்பவர் எவரையும் 
அசர வைக்கும் வல்லமை கொண்டது.

அகிலத்தையே அசைக்கும் 
பெருமை மிக்கது.

"வசிஷ்ட மகரிஷியே !
என்வரலாறு யாருக்கும் 
பிரமிப்பு தரும்.

அதில் 
என் ஆயுள் வரலாறு எப்படிப்பட்டவருக்கும் மயக்கம் தரும்.

இது இறைவனின் கருணை.

 மயூரநாதனின் மகிமை.

சீர்காழி  மாயூரநாதனே எனக்கு 
அருள் தந்து 
ஆயுள் தந்து 
வடிவு தந்து 
காத்து வரும் 
நாத பிரான்.

நான்
பல கோடி 
யுகங்கள் கண்டவன்.

யுகம் பற்றிய 
கணக்கு ஒன்று உண்டு. கேளுங்கள்....
அதுவே பிரமிப்பூட்டும். 

மொத்த யுகங்கள் 18. ஒவ்வொன்றும் 
பல கோடி வருடங்கள்.

அறியுகம்14 கோடி வருடங்கள். 
அற்புதனர் யுகம்
10 கோடி ஆண்டுகள்.

தர்ம யுகம்12 கோடி.
ராசி யுகம் 16 கோடி. வீராசன் யுகம் 20 கோடி. 
விண் யுகம் 16 கோடி. வாயுயுகம் 7 கோடி.
மைன யுகம் 6 கோடி.

இவ்விதம் தொடங்கி கலியுகம் 
4 கோடியே 72 ஆயிரம் ஆண்டுகள்.

18 யுகங்கள்.
ஒரு கல்பம்.
இந்த கல்பம் 15 சேர்ந்தால் அது இந்திரனின் ஒருநாள்.

இந்திரன் கணக்கில் 
60 வருடம் சேர்ந்தால்
அதன் பேர் 
ஆண்டு யுகம்.
18 ஆண்டு யுகம்
 ஒரு பிரளயம்.

ஒரு லட்சம்பிரளயம்
ஒருநாள் பெருக்கம்.
16 நாள் பெருக்கமே இந்திரன் ஆயுள்.

 7000 கோடி நாள் பெருக்கு
வகோர முனிவரின் ஆயுள்.

வகோர முனிவரின் 
8 கோடி நாள் நாதமுனியின்ஆயுள்.

நாதமுனியின் 
ஒரு கோடி நாள் விஷ்ணுமுனிக்கு ஆயுள்."

இப்படித் தொடர்ந்து ஒவ்வொரு முனிவருக்கும் 
அவர்தம் ஆயுள்
பற்பல கோடி பல்லாயிரம் கோடி 
கூடி வரும்.

அந்த வகையில் பார்துமா முனிவர்
பல்லாயிரம் கோடி ஆயுட்காலம் பெற்றவர்.
மூன்றரை கோடி உரோமம் உதிர்ந்தால் 
அவர் ஆயுள் நிறையும்.

அது பற்பல பல்லாயிரம் கோடிகள் என வரும் போது திருமால் 
சங்கரர் மகாவிஷ்ணுவின் ஆயுள்கள் பூரணமாகும்.

இப்படி யுகக் கணக்கு இருக்கையில் 
என் ஆயுளை 
நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இது 
நம்ப முடியாததாக இருக்கலாம்.

ஆனால் 
இதுவே உண்மை.
இது இறையருள் கணக்கு.

இதற்கு ஒரு 
தற்காலிக சாட்சி நானே.

உரோமரிஷி 
என் புதல்வனே ...!
சீடனே...!!

உங்களுக்கு தெரியுமா?

காலக் கணக்கில் வரும் உரோமம்
இதுவரை எனக்கு 
ஒரு முறை கூட உதிரிந்தது இல்லை.

என் நீண்ட ஆயுளில்
நான் கண்டதைச் சொல்கிறேன்... செவிமடுத்துக் கேளுங்கள்.

மாயூரநாதனைத் தரிசிக்க 
உமாதேவி 
மயில் வடிவம் கொண்டு 
மாயூரம் வந்து 
பூஜை செய்வதை 
நான் பார்த்திருக்கிறேன்.

அப்படி 
இரண்டு முறை இறைவியைப் பார்த்த பாக்கியசாலி நான்....

உங்களுக்குத் தெரியும்... 

ஆதியில் 
பிரமனுக்கு 
ஐந்து முகங்கள் இருந்தன.

'சிவனைப் போலவே எனக்கும் ஐந்து முகம் எனவே
நானும் சிவனும் 
சரி சமம் '
என 
கர்வம் ஏற்பட்டது பிரமனிடத்தில்... 

கர்வத்தின் 
விளைவு ?

ஒரு தலை கொய்யப்பட்டது இறைவன் திருவருளால். 

நடுத்தலை இழந்த பிரமன்
நான்முகன் ஆனான்

ஐந்து தலைகளோடு மாயூரம் வந்து சிவபூஜை செய்த பிரமதேவனை
நான்
ஒன்பதுபிறவியாய் 
ஒன்பது முறை 
ஒன்பது பிரமனை பார்த்திருக்கிறேன்.

அதன்பின் 
நான்கு தலைகளோடு நான்முகன் 
வந்து சென்றதை 
பத்து முறை பார்த்திருக்கிறேன்.

மகாவிஷ்ணு கூட ஆதிகாலத்தில் வெண்மை நிறத்தில் இருந்தார்.

பாற்கடலைக் கடைந்தபோது பக்தர்களைக் காக்க அவரும் 
சிவனைப் போல 
ஆலகால விஷம் உண்டு 
நீலம் கொண்டார்.

நான்
வெள்ளை நிற விஷ்ணு பிரானையும் நீலநிற விஷ்ணுவையும் 
10 தடவை பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் சிவ பூஜைக்காக 
அவர் 
மாயூரம் வருவார்.
இறையருள் 
பெற்றுச் செல்வார்.

தேவர்கள் 
பாற்கடலைக் கடைந்ததைக்  கண்ணாரக் கண்டிருக்கிறேன்.

உலகம் தோன்றிய காலத்தில் 
பூமி ,சூரியன், சந்திரன் தோற்றத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன்.

 இரண்யாட்சன் பூமியை எடுத்துச் செல்ல முயன்றதையும்  பெருமாள் 
வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டதையும் 
நேரில் கண்டு வியந்திருக்கிறேன்."

"காகபுஜண்டரே...! தாங்கள் 
சொல்லச் சொல்ல வியந்து சிலிர்க்கிறேன்...

எவ்வுலகமும் வியக்கூடிய 
ஞான அனுபவம் பெற்றவர் நீங்கள்...." வசிஷ்டர் வாயால் வாழ்த்துக்கள் நிறைந்தன.

"இன்னும் கேளுங்கள் மகரிஷி....

சிவபெருமான் இதுவரை 
30 தடவை முப்புரங்களை எரித்துள்ளார்.

தட்சனது யாகத்தை இரண்டுமுறை அழித்துள்ளார்.

மகாவிஷ்ணு பரசுராமராக 
ஆறு தடவை அவதரித்துள்ளார்.

ராம அவதாரம் 
10 முறை.
கிருஷ்ண அவதாரம்
15 முறை.

இவையெல்லாம் பார்த்தது 
எனது பாக்கியம்."

உடனே
"உங்களைத் தரிசிப்பது எனது பாக்கியம்... " 
வசிஷ்டர் வணங்கிச் சொன்னார்.

"உங்களுக்கு இது எட்டாவது பிறவி தெரியுமா ?" காகபுஜண்டர் கணக்குச் சொன்னார்.

வசிஷ்டர் அதிர்ந்து போனார்.

"அடேங்கப்பா... எட்டாவது பிறவியா?! "

காகபுஜண்டர் 
'ஆம் ' என்பது போல புன்னகை பூத்தார்.

தேவர்களும் தெய்வங்களும் சித்தர்களும் வியக்கும்  கணக்கில்லா 
ஆயுள் கொண்ட  காகபுஜண்டர்
இன்றும் அருவாய்
சீர்காழி அருகே திருமணஞ்சேரியிலும், காரைக்கால் அருகே திருமலைராயன் பட்டினத்திலும்,
திருப்பதி அருகே திருகாளஹத்தியிலும், கள்ளக்குறிச்சி அருகே தென்பொன்பரப்பியிலும்,
திருச்சி அருகே உறையூரிலும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.



Leave a Comment