அட்சய திருதியை நாளில் மகாலட்சுமியின் அருள் பெற...


அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.

அட்சய திருதியை வழிபாடு செய்ய, தானங்கள் செய்ய, உங்களுக்கு தெரிந்த கலையை, கல்வியை  மற்றவருக்கு போதிக்க, மஹாலக்ஷ்மி அல்லது குபேர பூஜை அல்லது லட்சுமி நாராயண பூஜை மேற்கண்ட நேரத்தில் செய்ய  மிக சிறப்பு.

மேலும் இந்த நாளில் புனித நீரில் நீராடுவது மிக சிறப்பான ஒன்று. முடியாதவர்கள், கையளவு கல் உப்பை நீரில் கரைத்து, கிழக்கு முகம் பார்த்து கங்கையை மனதில் தியானித்து குளிக்கலாம். அசைவம்  உட்பட, தோல் பொருட்கள் தவிர்ப்பதும் மிக அவசியம். இந்நாளில், எந்த அளவு தானம் செய்கிறீர்களோ, அந்த அளவு புண்ணிய பலனும் ஆத்மார்த்த திருப்தியும் வந்து சேரும். வெயிலில் வாடுவோருக்கு , வறியோருக்கு குடை, விசிறி, செருப்பு போன்றவை தானம் செய்ய, வீடு பேறு வந்தடையும். நீர் மோர், நீர் போன்றவை தானம் தர வற்றாத வாழ்வமையும். அன்னம், பணம் போன்றவை தானம் செய்ய செல்வ செழிப்பு மிக்க வாழ்வமையும். மேலும், திருமண தடை அல்லது திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்தித்து வருவோர் இந்நாளில் சுமங்கலிப்பெண்களுக்கும், பன்னிரண்டு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கும் தங்களால் முடிந்த புதிய ஆடை, மஞ்சள், வளையல், தாம்பூலம், மஞ்சள் லட்டு, தேங்காய் போன்றவையில் எவை முடிகிறதோ, எவ்வளவு நபருக்கு தங்கள் வசதிக்குட்பட்டு செய்ய முடியுமோ அதை தானம் செய்யலாம். முதியவர்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்வது மிக பெரும் நல்வாழ்வு அமைய வைக்கும். விரும்பிய தெய்வ உருவ படங்கள், பொருட்கள் வைத்து வழிபாட்டினை செய்வதும் சிறப்பு தரும்.

 அட்சய திருதியை நாளில் "வசந்த் மாதவாய நம" என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.

 அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும். ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.

மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.

 



Leave a Comment