பொறியியல் சித்தர் போகர் பிரான்


- "மாரி மைந்தன்" சிவராமன்

சித்தர் 
போகர் பிரான் 
ஓர் அற்புத சித்தர்.

பொறியியல் துறையின் 
வல்லப சித்தர். 

சீன தேசத்தில் 
அவர் செய்த  வித்தைகள் 
பற்பல கோடி..


 
தன் வித்தைகளை 'வேடிக்கைச் சிமிட்டு வித்தை '
என கண்சிமிட்டிச் சொல்லுவார் போகர்.

கவி பாடும் 
புலவர் என்பதால் அத்தனை செயல்களையும் அனுபவங்களையும் கண்டுபிடிப்புகளையும் அப்படியே 
பதிவு செய்திருக்கிறார்
சீன மொழியில்.

போகர் கட்டிய 
மரக் கப்பலும் தேவரதங்களும் வேறெந்த சித்தர்களும் சிந்திக்காதவை. 

அவற்றை 
உருவாகிய விதத்தை 
பாடம் போல் 
தன் பாடல்களில் பாங்காய் படைத்திருக்கிறார்.

2400 அடி நீளம்.
300 அடி அகலம். 
300 அடி உயரம்.
7 மாடிகள்.
64 வீடுகள்.

கொஞ்சம் கற்பனை செய்யுங்கள் !

2400 அடி நீளம்..
300 அடி அகலம்...
300 அடி உயரம்.... 
7 மாடிகள்.....
64 வீடுகள். 

இவை அரண்மனை ஜாடையில்....!

கிழக்கும் மேற்குமாய் வாயில்கள்.
தெற்கும் வடக்குமாக  ஜன்னல்கள்.

ஒவ்வொரு மச்சும் 
ஆறுகால் மண்டபம். ஒவ்வொரு மாடியிலும் 128 வாயில்கள்..

இத்தனை பிரமாண்டமும் எதன்மீது தெரியுமா ?

ஒரு மரக் கப்பலின் மீது.!!

டைட்டானிக் கப்பலே கிட்ட வர முடியாத அத்தனை அம்சங்கள்!

கப்பல் இயங்கும் தொழில்நுட்பம்... போகர் கொண்ட மதிநுட்பம்.

அப்பப்பா... 
என்ன ஆச்சரியம் ..! 
அந்த கப்பல் 
நீராவிக் கப்பலாம்.

கப்பலின் தலைவர்.. இயக்கிய மாலுமி
யார் தெரியுமா ?

போகர் தான்...
தன்னிகரில்லாத போகர் பிரான் தான்.

சீனாவில் இருந்தபோது 
அமைத்த
அந்த கப்பலில் 
சீன மக்களையும் 
ரிஷிகள் பலரையும் ஏற்றிக்கொண்டு உலகைச் சுற்றி 
ஏழு கடல்களையும் காண்பித்தார் 
சுற்றுலா பிரியரான பற்றிலா சித்தர்.

சுற்றுலா.
ஆன்மீக சுற்றுலா.
அவர் மக்களுக்கு சொன்ன 
அகமகிழ் தத்துவம்.

கடல் வழிப் பயணத்திற்கு 
மரக் கப்பல் படைத்தவர் விண்வெளிப் பயணத்தை 
விட்டு வைப்பாரா என்ன !

வானூர்தியும் படைத்தார்.

கையை நீட்டி 
சித்து புரிந்து மந்திரத்தால் மாங்காய் பறித்திடவில்லை சித்தர் பிரான்.

உயர் தொழில்நுட்பம். நுட்ப இயந்திர இயக்கம்
அதன் சிறப்பம்சம்.

அந்த பறக்கும் விமானத்தின் பெயர் தேவரதம் .

விளையாட்டாய் 
அதை காத்தாடி 
என்று அழைப்பது 
போகரின் வழக்கம்.

காத்தாடிக்குப் 
பட்டம் என பெயர் உண்டு அல்லவா?
பறக்கும் பட்டமே காத்தாடி.

30 அடி நீளம்
30 அடி அகலம் 
என  சதுர பரப்பில் பட்டம் செய்தார் 
போகர்.

ஒரு குடை ராட்டினம் போல் அதை அமைத்து இன்றைய ஹெலிகாப்டர் மாதிரி பறக்க வைத்தார்.

காந்த கொலுசுகளும் நார்ப்பட்டு கயிறுகளும் சித்தர் தொழில்நுட்பங்களும் கொண்டு 
காத்தாடி செய்து பறக்கவிட்டார்
போகர்.

சீன மக்களை 
ஏற்றிக் கொண்டு முதலில் 
முப்பது மைல் தூரம் பறந்து இருக்கிறார்.

பின் உலகம் முழுதும்
பல நாடுகளுக்குப் பறந்திருக்கிறார்.

ஏற்கனவே 
ககன குளிகை கொண்டு 
தான் மட்டும் பறந்தவர்- பல்லாயிரம் மைல்கள் கடந்தவர் 
இப்போது 
சீன அன்பர்களுக்காக- சீன மக்களுக்காக 
காத்தாடியை அர்ப்பணித்திருக்கிறார்.

போகர்
காத்தாடி 
துணை கொண்டு போன நாடுகள் 
பார்த்த சித்தர்கள் பெற்ற பாடங்கள் படைத்த பாடல்கள் அதிகம்.

போகர் சித்தர்களில் விவேகமானவர். விஞ்ஞானத்தில் விற்பனர்.

கற்க வேண்டியதைக் கற்பதும் 
கற்பிக்க வேண்டியதை பிறருக்குக் கற்பிப்பதுமே 
அவரது கல்விக்கொள்கை.

காத்தாடி தயாரிப்பதற்காகவே போகர்
அஸ்வினி மகரிஷியை சந்தித்ததாக புலிப்பாணியார் 
ஒரு பாடல் புனைந்திருக்கிறார்.

அஸ்வினி மகரிஷியிடம் 
ஓர் ஆகாயப் புரவியிருந்ததாம்.

அது
பஞ்சலோகத்தை உருக்கிச் செய்த உலோகப் புரவி .

அது பறப்பதைப்
பார்க்கும் போது ஒளிபொருந்திய சிவரதம் போல் இருக்குமாம்.

அஸ்வினி சித்தரைச் சந்தித்து
போகர் பிரான்
தாள் பணிந்த போது போகரின் பெருமைகளை திறமைகளை 
அம்மகரிஷி
ஏற்கனவே அறிந்திருந்ததால் போகரை
வாழ்த்திப் போற்றியதோடு
தான் வைத்திருந்த ஆகாயப் புரவியையும் அதிலிருந்த தொழில்நுட்பத்தையும் அதற்கேற்ற 
சித்த மந்திரங்களையும் சொல்லிக் கொடுத்தார் அசுவினி.

அதன்படி
வானரதம் தயாரித்த போகர் பிரான்
அன்பர்களை நண்பர்களை ஏற்றிக்கொண்டு உலகம் சுற்றி வந்தார்.

உண்மையில்
முதன் முதலில் 
உலகம் சுற்றிய வாலிபர் 
போகர் தான். 

போகரின் 
உலக பயணம் 
அறிய
அவர் வார்த்தைகளுடன் பயணித்தால் சுவாரசியம் கூடும்.

 'தானான ரோமாபுரி சுற்றி வந்தேன்.
தக்காண எண்ணாயிரம் காதமப்பா...

வேனான சித்தர்களை ஏற்றிக்கொண்டு வேகமுடன் தானடத்தி வந்தேனப்பா....

கோடி பேர் சமாதிநிலை 
தன்னைக் கண்டேன் கொற்றவனாம் ரோமாபுரி சமாதியோரம்

இப்படித் தொடர்கிறது போகரின் வான்வெளிப் பயணம்.
கலைமிகு 
ரோமாபுரிப் பயணம் .

ரோமாபுரிக்கு 
அடுத்து
ஜெருசலேம் செல்கிறார்.

'பாலான குருபரனை வணங்கி யானும் பார்க்கவே ஜெருசலேம் போகவென்று  மானான மாதாவைக் காணவென்று வணங்கினேன் 
அவர் பாதம் தொழுதிட்டேனே !

என்னவே இயேசுவின் தன் மகிமை மெத்த எடுத்துரைத்தார் 
சீஷர் வர்க்க 
அநேகம் பேர் '

ஜெருசலேமில் 
மேரி மாதாவையும் 
இயேசு பிரானையும் தரிசனம் கண்டவர் 
அடுத்து சென்றது 
அரபு தேசம்.

அரபு நாட்டு பயணத்தின் நோக்கம் இணையற்ற
இறைதூதர்
நபிகள் நாயகத்தை தரிசிப்பது தான். 
அதை போகரே சொல்கிறார்.

' மன்னர் மெய்ச்சு
மக்கவாம் புரியை
காண உவகையுடனே ரதம் திருப்பி..

திண்பான முகமது மார்க்கத்தார்கள் சிறப்புடனே கண்டேனே 
கோடி பேரே ! '

மெக்காவில்
சமாதி நிலையிலிருந்த யாகோபுவைச்
சந்தித்த போகர்
அவரது
ஞான சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார்.

அப்புறம் 
அவரது பயணம் 
தென் அமெரிக்கா என்கிறது 
பிறதொரு குறிப்பு.

' போச்சா 'என்பவர் தென் அமெரிக்கா வந்து 
எண்ணற்ற சீர்திருத்தங்கள் செய்ததாக -
கலாச்சார மாற்றம் ஏற்படுத்தியதாக 
எழுதி வைத்திருக்கிறார் 
சிலி நாட்டு வரலாற்றாசிரியர் 
மைகாஸ் ( Mucas )
என்பவர்.

அந்த போச்சா 
போகர் தான்
என்கிறது 
ஓர்
ஆய்வுக் குறிப்பு.

உலகம் சுற்றிய 
வாலிப சித்தர்
பாரிஸ் நகரையும் விட்டுவைக்கவில்லை.

'பண்பான குளிகையது பூண்டு கொண்டேன். பாங்கான பாரிஸ் சபதியைக் கண்டேன்' என 
வியக்க வைக்கிறார்.

உலகைச் சுற்றிய அனுபவம் ,
உமையவள் வழங்கிய ஞானம் 
போகருக்கு மட்டுமல்ல உலகுக்கும்
பற்பல அறிவியல்
நன்மைகளை வழங்கின.

* நிலம் ஒரு பங்கு 
நீர் மூன்று பங்கு 
என்று 
புவிச்சூழல் அமைப்பை 
முதலில் சொன்னவர் 
போகர் பெருமானே.

* கடல் பயணத்தின் போது 
கடும் பாறையை -
பாயும் சுறாவைக் கண்டறிந்து 
விலகிச் செல்ல கப்பலுக்குள் கண்ணாடிக் கருவி கண்டுபிடித்து அமைத்திருந்தார் போகர்.

இன்றைய பெரிஸ்கோப்...
போகர் கண்டுபிடித்த அன்றைய 
போகர் ஸ்கோப் . 

* பீங்கானும் கண்ணாடியும் போகரின் கண்டுபிடிப்புகளே.

* வெப்பக் காற்றை நிரப்பி
உயரே பறக்கும்
பலூன்
போகரின் கண்டுபிடிப்பே..

அதற்கு 
அவர் 
வைத்த பெயர் 
'கூண்டு வித்தை '

* பாராசூட்டிற்கு முன்னோடி போகரே.
அதை
'குடை வித்தை '
என 
அறிமுகம் செய்தார் விஞ்ஞானி போகர்.

* கடலுக்கடியில் பாதுகாப்போடு பயமின்றிப் பயணிக்க
கவச உடையோடு சுவாசக்குழாய் 
முதலான உபகரணங்களை 
பன்னிரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
கண்டுபிடித்தவர் 
போகர் பிரான்.

அன்று உருவாய்
உலகைச் சுற்றிய போகர் பிரான்
இன்று அருவாய்
பழனி, காஞ்சிபுரம் பேரூர், சதுரகிரி 
ஆகிய தமிழகத் திருத்தலங்களில் சமாதி நிலையிலும்

இந்திய இமயமலைப் பகுதிகளில்
அமர்நாத், கேதார்நாத் பத்ரிநாத்...

திபெத் - சீன பகுதியில் கைலாஷ்நாத்...

நேபாளத்தில் பசுபதிநாத்....

ஆகிய 
ஐந்து தலங்களில்
நிஷ்ட நிலையிலும்
அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.



Leave a Comment