கலப்புத் திருமணம் செய்த சித்தர்


- 'மாரி மைந்தன்' சிவராமன்

சித்தர் பிரான்களில் சிறந்தவர் சிவவாக்கியர்.

சித்தர்களில் அதிக அளவு அதிஞானப் பாடல்களைப் புனைந்தவர் 
சிவவாக்கியரே.
அனல்பறக்கும் சொற்கள், புரட்சிக் கனல் தெறிக்கும் பாடல்கள், சிவவாக்கியரின் சிறப்பைச் சொல்லும்.

அந்தணர் குலத்தில் தோன்றிய அற்புத மகான் சிவவாக்கியர்.
தந்தையும் தாயும் வள்ளல் தன்மையில் ஊர் போற்ற வாழ்ந்தவர்கள்..

பெற்றோர் செய்த அறத்தின் பயனாய் 
அருள் தவத்தின் பலனாய் அவதரித்தார் சிவவாக்கியர்.

 ஆன்மீகப் பற்றும் தேடல்நிலையும் 
நிறைய இருந்தது என்பதைத் தவிர சிவவாக்கியர் குறித்த தகவல் அவரது ஐம்பது வயது வரை ஏதுமில்லை .
வடக்கே காசியின் மகிமையை கேள்விப்பட்ட சிவவாக்கியர் 
ஐம்பதாவது வயதின் நிறைவில் 
அங்கு சென்றது அவரது வாழ்வில் அரும்பிய திருப்புமுனை.

காசியில் ஒரு சித்தர். 
அவர் காசினி காணா பெரும் சித்தர்.
செருப்பு தைப்பது அவரது தொழில். 
சக்கிலி சித்தர் என்பர் அவரை 

அவர் சக்தி மிக்கவர். வாசியில் வல்லவர். சித்தியில் சிறந்தவர் என்பது யாருக்கும் தெரியாது.
 காசியின் 
குறும் சந்துகளில் 
இருபுறமும் வேடிக்கை பார்த்த வண்ணம் ஞானத்தேடலோடு சென்றுகொண்டிருந்த சிவவாக்கியர் கண்களில் அந்த சித்தர் பட்டார்.

சிவவாக்கியர் கண்கள் நகர மறுத்தன. அவரை விட்டு மீள மறுத்தன.
அப்படி ஒரு ஈர்க்கும் முகம். கவர்ந்திழுக்கும் பொலிவு.
வைத்த கண் வாங்காது சிவவாக்கியர் 
அச்சித்தரை நெருங்கினார்.

அதுவரை இல்லாத ஈர்ப்பு. பூர்வ ஜென்ம உறவு போல ஒரு தொடர்பு.
விட்டகுறையோ தொட்டகுறையோ நிறைநோக்கி நெருங்கி வந்தார் 
எதிர்கால சித்தர்.

"வாப்பா...
எதைத்தேடி வந்தாய் ?
வா....தேடியது கிடைக்கும்.

 இங்கே அமர்வாய்."
ஒரு பலகையைக் காட்டினார் சித்தர். 
பதில் ஏதும் சொல்லாமல் உத்தரவுக்கு உட்பட்ட பணியாளர் போல் 
அவர் முகத்தை தரிசித்தபடி அமர்ந்தார் சிவவாக்கியர்.

"எனது தேடல்...." ஆரம்பித்தார் சிவவாக்கியர்.
"தெரியுமே....!" அதிர்ச்சியூட்டினார் சித்தர்.
கொஞ்ச நேரம் அமைதி. இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

 ஆயினும் மௌனமும் பார்வையும் 
மெலிதாய் பேசின. 
நிறைய பேசின. நிறைவாய் பேசின.

குருவாய் செருப்புத் தைப்பவர். 
சீடராய் வேதம் ஓதிய அந்தணர். 
இருவரும் ஒன்றாகிப் போயினர்.

 "உனக்குத் தீர்வு சொல்கிறேன்....
 இந்தா ... இது நான்
 செருப்பு தைத்த காசு.

இதோ....
இது சுரைக்காய்...
பேய்ச் சுரைக்காய்.

 இரண்டையும் தருகிறேன்.
காசை
காசியில் 
ஓசையோடு ஓடும் கங்கையில் போடு.

கங்கை வேறுயாருமல்ல... என் தங்கையே !
 பேய் சுரக்காய் கசக்கும் அல்லவா ? 
கங்கை நீரில் கழுவி 
கசப்பு நீக்கி வா......"
குரு எடுத்துத் தந்தார்.

குரு பேச்சுக்கு மறுபேச்சு கூடாது. 
இதுவே குரு - சீடர் உறவுக்குப் பாலபாடம்.

அருகில் ஓடிய கங்கைக்குச் சென்றார் சிவவாக்கியர்.
காசை எடுத்து தூக்கி எறியும் போது....
ஆற்றிலிருந்து 
வலதுகை ஒன்று வளையோசை  ஒலிர மெதுவாய் எழுந்தது.

சிவவாக்கியரை சைகையால் 
வா.... வா வென அழைத்தது அத்திருக்கரம்.

காசினை அக்கையில் வைத்து வணங்கி நின்றார்.
பெண்ணரசியின் வலதுகை வளையோசை கலகலவென ஒலி எழுப்பிய வண்ணம் மீண்டும் நீருக்குள் மறைந்தது.

பின்னர்
பேய்ச் சுரைக்காயை கங்கை கரையினில் நின்று கருத்தாய் கழுவினார்.
குருவிடம் ஓடி வந்தார்.
தாழ் பணிந்தார்.

 "நல்லது......
ஆனால் நான் ஒரு தவறுசெய்துவிட்டேன்.,." சித்தர் சிரித்தபடி தொடர்ந்தார்.
"ஆம்....கங்கைநீர் இங்கேயே இருக்கிறது காசை அதில் போட்டிருக்கலாம்.

 உன் வாழ்வின் 
முற்பிறப்பு மாசுகளையும் கழுவி இருக்கலாம்.,,
இதோ பார்....
செருப்புத் தோலினால் ஆன  பை....."
அதைத் திறந்தார்.

அதில் கங்கை நீர் இருந்தது .
மீண்டும் அவளிடம்  காசைத் திரும்பக்கேள் ....,தருவாள்....... ஆசீர்வதிப்பாள் ....."

சிவவாக்கியர் எதுவும் யோசிக்கவில்லை.
ஒரு சொல்.
சிறு சொல்.
குரு சொல்....என்பது 
குரு சீடர் உறவின் 
அடுத்த பாடம்.

குருவின் திருவுருவில் திருவாய் மலர்ந்த சொற்களில் மயங்கியிருந்த 
சீடர் சிவவாக்கியர் மனமுருகி 
வேண்டி நின்றார்
குரு கட்டளைப்படி.

அந்த தோல் பையிலிருந்து புனித கங்கை வந்தாள்....
அதே வளையோசை....
காசு தந்தாள்.
சீடர் பெற்றார்.

ஆசீர்வதித்த படி கங்கையின் கை 
நீரில் மூழ்கியது .

"சரியப்பா...
உன் மனமும் குணமும் கொஞ்சம் குழம்பி இருக்கிறதே...!

உன் தேடல் கூட 
அதை நாடித் தானே..!"
புதிர் போட்டார் சித்தர்.

புரியாது விழித்தார் சிவவாக்கியர்.

"பெண்ணின்
கையைக் கண்டதும் பரவசம் அடைகிறாய்.!

காசு தரும்போதும் பெறும்போதும் 
கரம் படும்போதும் 
கிளர்ச்சி அடைகிறாய்.

ம் .....காமம்...
சித்திக்குமுன்
வாழ்ந்து விடு.....பின்வா....

சித்திக்கு அதுவே
சரியான வழி.

திருமணம் செய்துகொள். வாழ்ந்துபார்.....
பின் 
ஒரே மனம் நாடு.

முக்தி தேடு.
கண்டிப்பாகக் கிடைக்கும். சித்தி கைகூடும்.

சித்தரின் சொற்கள் சிவவாக்கியருக்குப் பிரமிப்பைத் தந்தன.
' எனது சஞ்சலங்கள் சுவாமிக்கு தெரிந்தது எப்படி ?
அண்மைக் காலமாய் ஐம்பது வயதில் எழும்
பேரின்பப் பெண்ணாசை... திருமணமா.. துறவறமா என்று இருந்த மனக்குழப்பம்
 இவருக்கும் தெரிந்திருக்கிறதே....'

யோசித்த நொடிகளில் குருவின் 
அடுத்த கட்டளை வந்தது.

"இந்தா ..மண் 
இது நீ கங்கையில் சுரையை கரைத்த போது ஒட்டி வந்தது.

இது ... ..நீ
கசப்பைக் கழுவியதாகக் கருதும் பேய்ச்சுரைக்காய்.

இரண்டையும் 
கொண்டு சொல்.

எந்த பெண்மணி இவற்றைக் கொண்டு சமைத்து தருகிறாளோ 
அவளே உன் மனையாள்.

அவளை மணம் செய்.
உன் மணம் சிறக்கும். மனம்,  பின் திறக்கும் ."

வாழ்த்தி 
விடைகொடுத்தார் 
செருப்பு சித்தரான 
பெரும் நெருப்பொத்த 
ஒளி சிந்தும் 
ஞானசித்தர்.

குருவின் வார்த்தைகளுக்கு
குறுக்கே 
நடக்குமா உண்மையா என்றெல்லாம் கேள்விகள் எழக்கூடாது.
 சந்தேகமே தப்பு .

குடும்ப உறவுக்கு மட்டுமல்ல. .
துறவுக்கும் 
சந்தேகம் மகா தப்பு.

குரு கட்டளையை ஒருநாள்கூட 
தாமதமாக்க கூடாது.

குரு - சீடர்- இறை
உறவில் 
தேர்ச்சி அடைய
சரணாகதி தான் 
சரியான வழி.

இவையெல்லாம் அடுத்தடுத்த பாடங்கள்.

அதி சீக்கிரமாய்
அதி தீவிரமாய் விடைபெற்றார் சிவவாக்கியர்.

ஐம்பது வயதிலும்  பதினாறு வயதினராய் தனக்கேற்ற இணை தேடி காதல் பயணம் மேற்கொண்டார்.
தெற்கே போகும் நடைபயணம் !
பாவம்,  சிவவாக்கியர்
அது ஒரு நீண்ட நெடிய பயணமாக இருந்தது.

பார்த்த பெண்டிரெல்லாம் சிவவாக்கியரின் உடற்கட்டில் -  உடற்கூறில் உருகி மனம் மயங்கி காதலிக்க வந்தது என்னவோ நிஜம்தான்.

ஆனால்
எச்சூட்டிலும் வேகாத மணலையும் 
கறிக்கு ஆகாத 
பேய்ச் சுரைக்காயையும் தந்து சமைத்து தர சொல்கிறாரே.... 
இவர் என்ன பைத்தியமா... என பயந்து விலகி 
கேலி பேசினர் .

ஆயிற்று 
இப்படியே சில காலம். தென் பகுதிக்கே வந்து சேர்ந்தார்.
அங்கே ஒரு காடு.
அதில் ஒரு குடியிறுப்பு. ஆதிவாசிகளான
குறவர் குடியிருப்பு.

அங்கு சென்றார் பெண்ணொன்று கண்டார் .
காட்சிக்கு இனியவளாய் மனதுக்கு உகந்தவளாய் அம்மங்கை தென்பட்டாள்.
"நிறைய பசி.... இவற்றை வைத்து சமைத்துத் தர முடியுமா ?"
 ஆவலோடு கேட்டார்.

பதிலே கூற வில்லை.
உடனே வாங்கினாள். உள்ளே சென்றாள்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்தாள் -
முகத்தில் பூத்திருந்த வியர்வை முத்துக்களை வலிக்காமல் வழித்தபடி.

கரங்களில் சுவையான சமையல். 
ஐந்து நட்சத்திர அறுசுவை உணவு தயார்.
அம்மணி அப்படி அற்புதமாய் சமைத்தது இறையருள்.
செருப்பு சித்தரின் விருப்பம்.

ஏன் என்று யோசிக்காமல் எப்படி என்றும் பார்க்காமல் துறவி போலிருக்கும் ஒருவர் கேட்டார் என்பதற்காக 
சமையலில் இறங்கிய சரணாகதி சிவவாக்கியருக்குப் பிடித்துப் போனது.

குரு சுட்டிக் காட்டிய மணமகள் 
அமுது படைத்த
குறவன் மகளான
 தங்க மயிலே
 என புரிந்தார். 

அவளே தனக்குரிய மனையாள் என்று  
மனம் மகிழ்ந்தார்.

காட்டிற்குச் சென்றிருந்த அவள் பெற்றோர் 
வரும் வரை 
காத்திருந்தார்.

பெண் கேட்டார். 
அவர்கட்கும் சம்மதமே .

இருப்பினும் வேண்டுகோள் ஒன்றை கண்டிப்போடு நிபந்தனையாக வைத்தார்கள்.

மாப்பிள்ளை 
தங்களுடனேயே தங்கி
தம் தொழிலே செய்து குலம் செழிக்க வைக்க வேண்டுமென்று.

சுருங்கச் சொல்லின் 
'வீட்டு மாப்பிள்ளை.'

ஐம்பது வயதில் 
இனி ஆவதென்ன?
குருவின் கட்டளை. மனைவியின் பெற்றோரின் நிர்பந்தம்.

சொந்தம் தொடங்கும்போதே 
பந்தம் வைக்கும்
நிர்பந்தம்.

மறுக்கவில்லை சிவவாக்கியர் .
நடந்தது திருமணம் 
குறவர் குடி வாழ்த்த.

அந்தணர் குலத்தில் பிறந்தவருக்கு 
குறவர் குலத்தில் திருமணம் .

குரு மனம் சுட்டிய நல்மணம். 
திருமணம் நாடியவருக்கு இரு மனம் ஒப்பிய
கலப்புத் திருமணம்.

குறவர் இனம் போற்ற தமிழ்த் திருமணம்.
சிவவாக்கியர் அவதரித்த போது உச்சரித்த முதல் சொல்லாய் சிவ.... சிவ என்று பவனி வந்தவர் சிவபிரான்.  
அவரின் ஞானமைந்தன் முருகப் பெருமான் மணந்தது வள்ளி என்னும் குறவர் குல கொழுந்தைத்தானே..!

முருகப்பெருமானைப் போன்றே சிவவாக்கியரும் குறவர் குலப் பெண்ணுக்கு மாலை சூடி 
குறவரானார்.
 



Leave a Comment