ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் யோகா - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்


மிக விரைவான இன்றைய வாழ்வியலில் மிக அதிக அளவு மக்கள் தங்களது ஆழ்ந்த கேள்விகளுக்கு விடை காண  முயல்கின்றனர். வாழ்க்கையில் இதற்கு மேல் ஏதேனும் இருக்கிறதா? வாழ்க்கையின் நோக்கம் என்ன? உண்மையில் வெற்றி என்பது என்ன? இவற்றுக்கெல்லாம் விடை காண்பது எளிதல்ல. அவ்வாறு கண்டறிந்தாலும் அவற்றினை திருப்தியுடன் ஒருவர் ஏற்றுக் கொள்ளக்கூடாது. இவற்றுக்கெல்லாம் ஓர் நிலையான விடை இருந்தால், மொத்த விஷயமுமே இந்நேரம் முடிந்திருக்கும். இக்கேள்விகள் அனைத்தும், ஒருவர் மிக கவனமாக மீண்டும் மீண்டும் உள் நோக்கிச் செல்ல வழிவகுக்கும் ஓர் பாதையாகும்.   

பல்வேறு தரப்பு மக்களுக்கும் ஆறுதலைத் தரும் யோகா, காலச் சோதனையை வென்ற ஓர் பழமையான இந்திய மருத்துவ முறையாகும். 35 ஆண்டுகளுக்கு முன்னர் வாழும் கலை துவங்கப் பெற்றபோது, ஹிப்பிகளால் மட்டுமே பின்தொடரப்பட்ட யோகா இன்று பெருமளவில் பிரபலமாகியுள்ளது. அனைத்துக் கண்டங்களிலும் கோடிக்கணக்கான மக்களால் இன்று யோகப் பயிற்சி செய்யப்படுகிறது. மாறிக் கொண்டிருக்கும் இன்றைய உலக மக்களின் விருப்பதேர்விற்கு ஏற்றபடி தன்னை  பொருத்தியமைத்துக்கொள்ள துவங்கியது.  இது, ஆச்சாரமான  நாடுகளில் கூட உலகளாவிய மற்றும் மதச்சார்பற்ற சான்றுகளை நிறுவி, பல்வேறு  நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் ஆகியவற்றில் ஈடுபாடுள்ள மக்களும்  யோகப்  பயிற்சி செய்ய உதவியுள்ளது.

யோகாவின்  ஆரோக்கிய தத்துவம் அதன் எட்டு உறுப்புக்களைச்  சுற்றி அமைந்திருக்கின்றது. துரதிருஷ்டவசமாக, மக்கள் அவற்றை  எட்டு படிகள், ஒன்றன் பின் ஒன்றாகத் தான் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர். இந்த உறுப்புக்கள் வரிசைமுறையில் இல்லை; அவை முழுமையின் பகுதிகள் ஆகும். இந்த எட்டு உறுப்புக்களும் ஒரு நாற்காலியில் உள்ள நான்கு கால்கள் போன்றவையாகும். ஒரு காலை இழுத்தால், முழு நாற்காலியும் நகரும். யோகாசனம் முக்கியம்தான் என்றாலும், பிராணயாமம், தியானம் இன்றி யோகா இல்லை. ஒரு சிறிய அளவிலான தியானம் ஒருவரது வாழ்க்கையையே  மாற்றப்  போதுமானதாகும்.

சிறைகளில் நடைபெறும் நமது பயிற்சித் திட்டங்களில் இதைப் பார்த்திருக்கிறேன். தியான அனுபவத்தைப் பெற்ற கைதிகளின் முழு சிந்தனை, செயல்முறை மற்றும் நடத்தை முறை மாற்றம் அடையும். அவர்கள்  பழிவாங்கும் உணர்வு, கோபம் ஆகியவற்றை எளிதாகக்  கைவிட்டு, ஆக்கப்பூர்வமாக சமூகத்திற்கு பங்களிக்க விரும்பும் அகிம்சை பாதையில் வரத் துவங்குவர். தியானம் (6வது உறுப்பு),  யாமங்கள்(1வது உறுப்பு ) மற்றும் நியமங்கள்(2வது உறுப்பு ) இவையிணைந்து ஒருவரது வாழ்க்கையில்  வெளிப்படுகின்றது. யோகா மூலம், மக்கள்  மனஅழுத்தம், பதட்டம், பணிக்களைப்பு, போதைக்கு அடிமையாதல், தூக்கமின்மை போன்ற பல நோய்களிலிருந்து நிவாரணம் அடைந்திருக்கின்றனர்.

உலக மக்களுக்கு யோகா ஒரு சக்தி வாய்ந்த கருவியாக இருக்கிறது. எனவே ஆதாரபூர்வமான அதை முன்வைக்கவும், தவறான கருத்துக்களை அகற்றவும் உதவுவதற்காக நமக்கு தகுந்த ஆசிரியர்கள் வேண்டும். முழுமையான அதன் தூய வடிவில் உள்ள யோகா, நவீன வாழ்க்கையின் அனைத்து துன்பங்களுக்கும் மூலகாரணத்தை ஆராய்ந்து அகற்ற முடியும் என்னும்  ஞானத் திறனைக் கொண்டிருக்கிறது.

 

வாழும்கலை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற யோகப்பயிற்சி

இன்று வாழ்க்கையின் மிகப் பெரிய நோய்களில்  ஒன்று மனஅழுத்தம். மிக குறைந்த நேரத்தில் மிக அதிகமாக பணிச்சுமையை ஏற்கும்போது மனஅழுத்தம் ஏற்படுகிறது. பணியைக் குறைப்பதும் நேரத்தை அதிகரிப்பதும் சாத்தியமற்றவை. எனவே நமக்கு  உள்ள ஆற்றல் நிலையை  அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. யோகா குறைந்தபட்ச நேரத்தில் அதிகபட்ச ஆற்றலை உருவாக்குகிறது. ஒரு சில நிமிடங்கள் செய்யும்  தியானம் ஒரு சில மணி நேரம் தூக்கத்திற்கு ஒப்பான ஓய்வை வழங்க முடியும். யோகா வழங்கும்  ஆழமான ஓய்வினால் ஒருவர், அதிக செயலாற்றலுடன்  கூர்மையான விழிப்புணர்வுடன் முடிவுகள் எடுப்பதில் உள்ளுணர்வுடன் விளங்க முடியும். அதன் பின்னர் அற்ப விஷயங்களில் சிக்கி அமிழ்ந்து போகாமல் பெரிய பிரச்சினைகளை  எதிர்கொண்டு பிறருக்காக அவற்றைத் தீர்க்கும் வலிமை படைத்தவராகிறார்.

யோகா என்பது  ஒரு பயிற்சி மட்டுமல்ல, அது மொத்த வடிவுலகையும் கடக்கும் ஓர் மெய்யுணர்வு நிலையாகும். இன்றைய உலகில் ஒருவரது,  ஆழமான ஆற்றல்களை கண்டுணர்ந்து காக்கும் ஓர் வழியாகும்.

- குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்



Leave a Comment