மதுரை மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடத்துவது ஏன்? 


சிதம்பரத்தை ஆள்பவர் நடராஜர்; மதுரையை ஆள்பவள் மீனாட்சி... மதுரை நகரத்துக்கு அவள்தான் அதிகாரி. அங்கு அவளுடைய அனுமதியின்றி எதுவும் நடப்பதில்லை. ஒவ்வொரு நாளும் மதுரை மீனாட்சி அம்மனுக்கு எட்டு கால பூஜை நடைபெறுகிறது. ஒவ்வொரு கால பூஜையிலும் அம்பிகை ஒவ்வொரு கோலத்தில் திருக்காட்சி தருகிறாள். திருவனந்தல் பூஜை தொடங்கி அர்த்த ஜாம பூஜை வரை எட்டு காலங்களில் முறையே மஹா ஷோடசி, பாலை, புவனை, கௌரி, சியாமளை, பஞ்சதசி, மாதங்கி, ஷோடசி ஆகிய எட்டு திருக்கோலங்களில் காட்சிதருகிறாள். எட்டு திருக்கோலங்களில் காட்சிதரும் அன்னை மீனாட்சி, மதுரையின் பேரரசி என்பதால், அன்னைக்கு நடக்கும் அபிஷேகத்தை யாரும் தரிசிக்க முடியாது. அபிஷேக அலங்காரங்கள் முடிந்து திரை விலகிய பிறகுதான் அன்னையை தரிசிக்க முடியும்.

சியாமளாதேவியின் பக்தையாக இருந்த வித்யாவதி என்னும் கந்தர்வப் பெண்தான், அடுத்த பிறவியில் காஞ்சனமாலையாகப் பிறந்து மலையத்துவஜ பாண்டியரின் அரசியானார். அவர்களின் பூர்வ ஜன்ம புண்ணியத்தின் பலனாக, அன்னை சக்தியே அவர்களுக்கு மகளாகத் தோன்றி அருள் செய்தார். பாண்டியன் மகளாக அவதரித்த மீனாட்சி அம்மன், ஆண்மகனைப் போன்று போர்க்கலை உள்ளிட்ட சகல கலைகளிலும் சிறந்து விளங்கினார்.  

மதுரையின் இளவரசியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மீனாட்சி, தன்னுடைய வீரத்தையும் போர்த்திறனையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக, அனைத்துப் பகுதிகளுக்கும் திக்விஜயம் செய்தார். எதிர்ப்பவர் யாருமில்லாமல், அனைத்துப் பகுதிகளிலும் வெற்றிக்கொடியும் நாட்டினார். இறுதியில் கயிலைக்கும் சென்றார். ஈசனைக் கண்டார். அவரைக் கண்ட மாத்திரத்தில் மீனாட்சிக்குள் இருந்த வீரம் மறைந்து, ஐயனிடம் அன்பு மேலிட்டது. பெண்மை மிளிர்ந்தது. அவரையே திருமணம் செய்துகொள்ளவும் விரும்பினார். திருமணமும் நடைபெற்றது. புராணக் காலத்தில் நிகழ்ந்த அந்த தெய்வத் திருமண வைபவத்தை நினைவுகூரும் வகையில், மதுரையில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 

மீனாட்சி திருக்கல்யாண வைபவத்துக்கு முதல் நாள், திக்விஜயம் செய்து தேசம் முழுவதையும் தன்னுடைய ஆட்சிக்கு உட்படுத்திய இளவரசி மீனாட்சியை, மதுரையின் அரசியாக முடிசூட்டி பட்டாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். சித்திரைத் திருவிழாவின் 8-வது நாளான நாளை காலையில் விசேஷ அபிஷேகம், பூஜைகள் முடிந்த பிறகு, பட்டாபிஷேகம் நடைபெறும் பந்தலுக்கு மீனாட்சி அம்மன் எழுந்தருளுவார். அன்னைக்கு முடி சூட்டுவதற்காக 'ராயர் கிரீடம்' எனப்படும் வைரக் கிரீடம் அனுக்ஞை விநாயகர் சந்நிதியிலிருந்து கொண்டுவரப்படும். உடன் செங்கோலும் கொண்டு வரப்படும். 

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க, வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளும் மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, கிரீடம் சூட்டி, செங்கோலும் வழங்கப்படும். பின்னர் மீனாட்சிக்கு உரிய வேப்பம்பூ மாலையும் மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்படும். பட்டாபிஷேக வைபவம் நிறைவு பெற்ற பிறகு, நான்கு வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சி தருவார்.
 



Leave a Comment