நல்ல வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும் ?


நல்ல வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும் ?
நல்ல வேலை எல்லோருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. படித்துக் கொண்டிருக்கும்போதே சிலருக்கு, படிப்பை முடித்தவுடன் தான் படித்ததற்கு ஏற்ற வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் வந்துவிடும். தனது தகுதிக்கு தகுந்த வேலையை எப்படி தேடி பிடிப்பது என்ற பயமும் வந்துவிடும். இப்படிப்பட்ட பயங்களை எல்லாம் கடந்து எப்படியாவது முட்டிமோதி படிப்பில் தேர்ச்சி பெற்று வந்துவிடுவோம். ஆனால் இந்த சமுதாயத்தில் படித்த படிப்பிற்கும், கிடைக்கும் வேலைக்கும் சம்மந்தமே இல்லாமல் தான் பலர், கடமைக்காக வேலையை செய்து கொண்டிருக்கின்றார்கள். 
படித்து முடித்து விட்டோம். சம்பாதிக்காமல் இருந்தால் இந்த சமூகத்தில் பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். இதன் மூலம் பிடித்த வேலை கிடைக்கவில்லை என்றால் என்ன? கிடைத்த வேலைக்கு செல்வோம் என்று சொல்லிக்கொண்டு மனதிற்கு இஷ்டம் இல்லாத வேலைகளை செய்வோரின் எண்ணிக்கை தான் இன்றளவில் அதிகமாக உள்ளது. இப்படி தன் மனதிற்கு இஷ்டம் இல்லாத வேலையை செய்வதன் மூலம் அந்தத் துறையில் நம்மால் முன்னேற்றம் அடைவது என்பது இயலாத ஒன்றாகிவிடும். இதன் மூலம் வாழ்க்கையின் முன்னேற்றமானது தடைபடும். எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் முட்டிமோதி மேலே வந்துவிடுவர். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தினால் ஆரம்பித்த இடத்திற்கே வந்து முடிந்துவிடும்.
 இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைப்பதற்கான சுலபமான வழிபாடு தான் ராஜராஜேஸ்வரி அம்மன் வழிபாடு. ராஜராஜேஸ்வரி அம்மன் வழிபாட்டை எப்படி செய்வது என்பதை பற்றி இப்போது விரிவாக காண்போம்.
 முதலில் நம் பூஜை அறையில் ராஜராஜேஸ்வரி அம்மன் திரு உருவப்படத்தை வைக்க வேண்டும் அந்த அம்மனின் படத்திற்கு தினம்தோறும் வாசனை மலர் சூட்ட வேண்டும். அம்மனை வழிபட தொடங்குவதற்கு முன்பு முதலில் விநாயகரை வணங்கி கொள்ள வேண்டும். அம்பாளின் படத்தின் முன்பு 2 நெய் தீபங்கள் ஏற்றி வைக்கப்பட வேண்டும். அடுத்ததாக ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு வாசனை உள்ள உதிரி பூக்களைக் கொண்டு ‘ஓம் ராஜராஜேஸ்வரியே நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து அர்ச்சனை செய்து வர வேண்டும். 
மந்திரம் சொல்லி முடிக்கப்பட்ட பின்பு அம்மனுக்கு தீப, தூப ஆராதனை காட்டி நமஸ்காரம் செய்து வணங்கிக் கொள்ள வேண்டும். உங்கள் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்க வேண்டும் என்றாலும், உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்க வேண்டும் என்றாலும், சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்றாலும், உயர் பதவி கிடைக்க வேண்டும் என்றாலும் இப்படி தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் இந்த வழிபாட்டினை மனதார தொடர்ந்து செய்து வரவேண்டும். 
இந்த பூஜைகளை பாதிக்கப்பட்டவர் தான் செய்ய வேண்டும் என்பதில் எந்த அவசியமும் இல்லை. தன் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு தாய் இந்தப் பூஜையை செய்து வரலாம். தன் கணவனுக்காக மனைவியும் செய்யலாம். முழு நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் செய்யும் எந்த வழிபாடாக இருந்தாலும் அது வெற்றியை அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.



Leave a Comment