திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து


பிரம்மோற்சவத்தை ஒட்டி திருப்பதியில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனை அடுத்து 5 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் வரும் 30-ம்தேதி முதல் அக்.8-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் ஏழுமலையான் கோவில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி நாளை செவ்வாய்க்கிழமை ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் கோவில் சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. அதனால் நாளை காலை 6 மணி முதல் மதியம் 11 மணி வரை சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுத்தப்படுத்தும் பணி நிறைவு பெற்றவுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அன்று சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனா உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்பட உள்ளது.

 ஆண்டுக்கு 4 முறை வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்களுக்கு முன் ஏழுமலையான் கோவில் சுத்தப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
 



Leave a Comment