நெல்லையில் மகா புஷ்கரம் விழா கோலாகலமாக தொடங்கியது!


நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கரம் விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து விருச்சிக ராசியின் தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

மகா புஷ்கரம் விழா வழிபாடு :
இந்த புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய மகாபுஷ்கர விழாவாகும். இதையடுத்து புஷ்கர விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு அமைப்புகள் சார்பில் பூஜைகள், சிறப்பு யாகங்கள் செய்து தாமிரபரணி நதிக்கு வழிபாடு நடத்த உள்ளனர். இன்று தொடங்கி 12 நாட்கள் இந்த வழிபாடு நடைபெறும்.

இதையடுத்து, நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவை இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். பின்பு அங்கு புனித நீராடும் ஆளுநர், பாபநாசம் சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் நடைபெறும் தாமிரபரணி புஷ்கர துறவிகள் மாநாட்டிலும் பங்கேற்கிறார்.

இன்று மாலை 5.15 மணிக்கு நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த பகுதியில் நடைபெறும் புஷ்கர விழாவில் கலந்துகொண்டு தாமிர பரணிக்கு ஆரத்தி எடுத்து, ஆளுநர் பூஜையை தொடங்கி வைக்கிறார். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புஷ்கரம் அன்று என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

மாலை நடைபெற இருக்கும் ஆரத்தி பூஜையின்போது காசியில் கங்கைக்கு நடப்பது போன்று மகாபரணி ஆரத்தி செய்யப்பட உள்ளது. இதற்காக காசியில் இருந்து 7 சிறப்பு ஆரத்தி தட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள முக்க்ய கோவில்களின் 12 தேர் ரதங்கள், மதுரை வழியாக நெல்லையை வந்தடையும். இந்த ரதம் ஊர்வலம் இன்று சிறப்பாக தொடங்கியது.



Leave a Comment