கார்த்திகை மாத அமாவாசை... தர்பார் திருக்கோலத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன்...


மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவாசை தினத்தில்  அங்காளம்மன் தர்பார் திருக்கோலத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழுப்புரம் மாவட்டம்  மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம்

இந்நிலையில் கார்த்திகை மாத அமாவாசை தினமான நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர்  அங்காளம்மனுக்கும் பால்,பழம், சந்தனம், பழச்சாறு ஆகியவைகளை கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து  உற்சவர் அம்மன் அங்காளம்மன் தர்பார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

பின்னர் நள்ளிரவு 10.30 மணி அளவில் அங்காளம்மன் தர்பார் திருக்கோலத்தில் உள்ள உற்சவர் அங்காளம்மனை கோவிலின் வடக்கு வாயில் வழியாக பூசாரிகள் தாலாட்டியவாறு தோளில் சுமந்து வந்து ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் அமர வைத்து பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடினர்.

நள்ளிரவில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா,கர்நாடகா, தெலுங்கான, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமிதரிசனம் செய்தனர்.



Leave a Comment