நாகதோஷம் நீக்கும் நாக சதுர்த்தி வழிபடும் முறைகள்...


நாகங்களை நாம் தெய்வாம்சம் பொருந்திய உயிர்களாகக் கருதி வழிபடுகிறோம். நாக வழிபாடு என்பது வேத காலத்திலிருந்தே இருந்துவரும் முக்கியமான வழிபாடு. நாகத்தை வழிபடுவதற்கு உகந்த நாள் `நாக சதுர்த்தி’. நாகத்தை வழிபட்டு நாக தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறுவதற்கு உகந்த தினம்  நாக சதுர்த்தி தினமாகும். சதுர்த்தியன்று விரதம் இருந்து, துள்ளுமாவு படைத்து வேண்டிக்கொண்டால் தோஷங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம்.

கருட பஞ்சமிக்கு முன்பு அமையும் சதுர்த்தி திதி நாளே ‘நாக சதுர்த்தி’ தினமாகும். பொதுவாக, ஆடி மாதம் சதுர்த்தி தினத்தில் தொடங்கும் நாக சதுர்த்தி விரத வழிபாடு அடுத்த வருட ஆனி மாத சதுர்த்தியோடு முடிவடையும். இடைப்பட்ட மாதங்களில் வரும் ஒவ்வொரு சதுர்த்தி தினமும் நாக சதுர்த்தி தினமாகும். அவற்றில் முக்கியமானது சஷ்டி விரதத்தோடு அனுஷ்டிக்கப்படும் ஐப்பசி மாத நாக சதுர்த்தி.

பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாக தோஷம் இருப்பவர்களுக்குப் பரிகாரமே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிலும், ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் அபாயகரமானது. ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாகம் தொடர்ந்து வரும் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம்.

பொதுவாக ராகு, கேது தோஷம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்களின் பார்வையில் அடிக்கடி நாகம் தென்படும். நாகதோஷம் இருப்பவர்களுக்கு இந்த நாள் தினம் மிகவும் முக்கியமானது. நாக சதுர்த்தியின்போது நாகத்தைப் பிரதிஷ்டை செய்து புற்றில் மஞ்சள் பொடி வைத்து நாகத்தை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

நாக தோஷம் இருப்பவர்களுக்குத் தொடர்ந்து திருமணத் தடை ஏற்பட்டுக் கொண்டிருக்கும். கணவன் - மனைவி பிரிந்து வாழ்வார்கள், குழந்தை பாக்கியம் இருக்காது. இந்தத் தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு நாகத்தைப் பிரதிஷ்டை செய்து நாகருக்கு உண்டான வழிபாட்டினை மேற்கொண்டாலே கை மேல் பலன் கிடைக்கும். அனைத்துத் தடைகளும் விலகி உடனே திருமணம் நடைபெறும்.



Leave a Comment