பெண் வடிவ தட்சிணாமூர்த்தி!


 

 

சிவனுடன் போட்டி நடனமிட்ட பார்வதி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை காளி கோவிலில் அருள்பாலிக்கிறாள். இங்கு பெண் வடிவ தட்சிணாமூர்த்தி உள்ளார்.

தல வரலாறு: சிவ, சக்தி இடையே தங்களில் யார் சக்தி மிக்கவர் என வாதம் ஏற்பட்டது. பார்வதிதேவி, 'நானே உயர்ந்தவள்' என வாதிட்டாள். ''சரி...நீயே உயர்ந்தவளாக இரு!'' என்ற சிவன் அவளை உக்கிர (கோபம்) காளியாக மாற்றி விட்டார். தாயுள்ளம் கொண்ட தனக்கு கோபம் வரும்படி ஆகி விட்டதே என வருந்திய பார்வதி, சிவனிடம் விமோசனம் கேட்டாள். 
அதற்கு சிவன், ''பார்வதி! நீ வருந்த வேண்டாம். உலக நன்மை கருதி நான் செய்த திருவிளையாடலே இது. அரக்கர்களால் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் துன்பம் ஏற்பட இருக்கிறது. நீ அவர்களை அழிக்க வேண்டும். பின், தில்லை(சிதம்பரம்) வந்து என்னை நோக்கி தவம் இரு. நான் அங்கு ஆனந்த நடனமாட, நடராஜர் என்ற பெயர் தாங்கி வருவேன். அப்போது சிவகாமி என்ற பெயருடன் என்னை வந்தடைவாய்,'' என்றார். 
அவள் 'தில்லை காளி' என்ற பெயரில் சிதம்பரத்தில் அமர்ந்தாள். 'எல்லைக்காளி' என்றும் சொல்வர். 
நான்கு முக அம்மன்: சிவனுக்கும், அம்பாளுக்கும் நடந்த நடனப் போட்டியில், சிவன் ஊர்த்துவ தாண்டவர் என்ற பெயரில், உக்ர தாண்டவம் ஆடினார். ஒரு கட்டத்தில் தன் காலைத் தலையில் தூக்கி வைத்து ஆடிய சிவன், இவ்வாறே காளியால் செய்ய முடியுமா என கேட்டார். ஆனால், பெண்மைக்குரிய தன்மையால் அவளால் இயலவில்லை. இதனால் அவள் தோற்றாள். இதையடுத்து காளியின் கோபம் அதிகரித்தது. அவளை அமைதிப்படுத்த விரும்பிய பிரம்மா, 'வேதநாயகி' எனப் புகழ்ந்து பாடி, நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில் உருவத்தை மாற்றும்படி வேண்டினார். அவளும் 'பிரம்ம சாமுண்டீஸ்வரி' என்ற பெயரில் நான்கு முகத்துடன் காட்சி தந்தாள். இவள் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சாந்தசொரூபிணியாக அருள்கிறாள்.
தில்லை காளி: தில்லை காளிக்கு பக்தர்கள் நல்லெண்ணெய் அபிஷேகம், வெள்ளை வஸ்திரம் அணிவித்தல், குங்கும அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். ஞாயிறு (ராகு காலம்), பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜை நடக்கும். மகம் நட்சத்திரத்திற்கு இவள் அதிதேவதை என்பதால், மகத்தில் பிறந்தவர்கள், நினைத்தது நிறைவேற இவளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். 
வித்தியாசமான தட்சிணாமூர்த்தி: தட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் 'கடம்பவன தக்ஷணரூபிணி' என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். விரிந்த கூந்தலுடன் கல்லால மரத்தடியில் காட்சி தருகிறார். அருகில் சனகர், சனந்தனர், சனவாதனர், சனத்குமாரர் என்ற முனிவர்கள் வீற்றிருக்கின்றனர். கல்வியில் சிறப்பு பெற மாணவர்கள் வியாழனன்று நெய் தீபமேற்றி வழிபடுகின்றனர். பிரகாரத்தில், நின்ற கோலத்தில் உள்ள சரஸ்வதிக்கு 'வீணை வித்யாம்பிகை' என்று பெயர். கல்வி அபிவிருத்திக்காக இவளை வணங்கி வரலாம்.



Leave a Comment