ஸ்ரீரங்கத்தில் உறியடி உற்சவம்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற உறியடி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடை பெறும் உறியடி உற்சவம் மிகவு ம் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. நேற்று மாலை உறியடி உற்சவம் நடைபெற்றது. உறியடி உற்சவத்திற்காக நேற்று காலை கிருஷ்ணன் புறப்பாடு நடைபெற்றது.

காலை 7.15க்கு கிருஷ்ணர் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து எண்ணெய் விளையாட்டு கண்டருளி 9 மணிக்கு சன்னதிக்கு வந்து சேர்ந்தார். பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீ நம்பெருமாள் உபயநாச்சியார்கள், கிருஷ்ணருடன் புறப்பட்டு ஆஸ்தான மண்டபத்துக்கு வந்தார்.

இதையடுத்து மாலையில் மண்டபத்திலிருந்து ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் நீண்ட சவுரி முடியுடன் முன்செல்ல ஸ்ரீநம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் பின்தொடர்ந்து வந்தார்.

உறியடி உற்சவத்திற்காக நாலுகால் மண்டபத்தின் மேல் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதில் அலங்கரிக்கப்பட்ட 3 பானைகளில் பால், தயிர், வெண்ணெய் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணன் நாலுகால் மண்டபம் எதிரில் வந்தவுடன் கீழிருந்து நீண்ட குச்சியின் மூலம் அந்த பானைகள் உடைக்கப்பட்டு உறியடி உற்சவம் நடைபெற்றது. பானை உடைந்தபோது கீழே சிதறிய பால், தயிர், வெண்ணெயை பக்தர்கள் பிரசாதமாக எடுத்து உண்டனர். பின்னர் அங்கிருந்து கிருஷ்ணன் மற்றும் நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தனர்.



Leave a Comment