கோலாகலமாக தொடங்கிய வைகுண்டசாமி ஆவணி திருவிழா!


கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இந்த பதியில் ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆவணி திருவிழா இன்று  காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 27-ந் தேதி வரை நடைபெறும்.

கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், திரு நடைதிறத்தல், அய்யாவுக்கு பணிவிடை ஆகியவை நடைபெற்றது. காலை 6 மணிக்கு கொடிப்பட்டம் தயாரித்தல், தொடர்ந்து திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது மதியம் 12 மணிக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

2-ம் நாள் விழாவில் இரவு அய்யா வைகுண்டசாமி பரங்கி நாற்காலியில் திருபவனி வரும் நிகழ்ச்சி, 3-ம் நாள் இரவு அய்யா அன்ன வாகனத்தில் தெருவைச்சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி, 4-ம் நாள் சப்பர வாகனத்தில் பவனி வருதல், 5-ம் நாள் பச்சை சாற்றி சப்பரம் வாகனத்தில் பவனி வருதல், 6-ம் நாள் சர்ப்ப வாகனத்தில் பவனி வருதல், 7-ம் நாள் கருட வாகனத்தில் பவனி வருதல் ஆகியவை நடைபெறுகிறது.

வருகிற 24-ந் தேதி 8-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், 9-ம் நாள் இரவு அனுமன் வாகன பவனி, 10-ம் திருவிழாவில் இரவு இந்திர வாகனத்தில் பவனியும் நடைபெறுகிறது. விழாவின் இறுதி நாளான 27-ந் தேதி மதியம் 12 மணிக்கு திருவிழா தேரோட்டம் நடக்கிறது. இத்திருவிழாவில் கலந்து கொண்டு அய்யா வைகுந்தரை வழிபடு எண்ணற்ற பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருகைப் புரிந்துள்ளனர்.



Leave a Comment