திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம்... கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்...


திருப்பதி ஏழுமலையான்  பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது இதில் எட்டாம் நாளான இன்று காலை கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் சாலகட்ல பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் தேரோட்டம் திருமலை மாட வீதிகளில் வெகு விமர்சியாக நடைபெற்றது.

கடந்த 18ம் தேதி  திருப்பதி  ஏழுமலையான் கோயில் சாலகட்ல பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பிரமோற்சவத்தின்  முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்ட மலையப்ப சுவாமி தேர் மீது எழுந்தருளினார்.

தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகள் தூப, தீப,நைவேத்தியம் ஆகியவற்றுக்குப் பின் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் வடம் பிடிக்க திருமலை நான்கு மாட வீதிகளில் ஏழுமலையானின் தேரோட்டம் வைபவமாக நடைபெற்றது.

இதில் நான்கு மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தை கண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.



Leave a Comment