சந்திர கிரகணம் - தைப்பூசத்தில் பூஜைநேரம் மாற்றம்


தைப்பூச தினத்தன்று சந்திர கிரகணம் ஏற்படுவதால் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பூஜை காலங்கள் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜனவரி 31-ம் தேதி புதன்கிழமை, தைப்பூச விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 5.16 மணி முதல் இரவு 8.50 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால், அன்று ஒருநாள் மட்டும் பூஜை நேரங்களில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது. தைப்பூசத்தன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபஆராதனையும் தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதைத் தொடர்ந்து தீபாராதனையும் நடக்கிறது. காலை 7 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் தீபாராதனையும் நடக்கிறது. தீபாராதனைக்குப் பின், தைப் பூசத்தை முன்னிட்டு காலை 8 மணிக்கு சுவாமி அலைவாய் உகந்த பெருமாள் திருச்சப்பரத்தில் எழுந்தருளி, முக்கிய வீதி வழியாக உலா வந்து தைப்பூச மண்டபத்தை அடைகிறார். அங்கு, அவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கின்றன. மாலை 4 மணிக்கு, சுவாமி அலைவாய் உகந்த பெருமாள் ரத வீதிகள் வழியாக வந்து திருக்கோயிலை அடைகிறார். பின், சந்திர கிரகணத்தை முன்னிட்டு 4.15 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாத்தப்பட்டு நடை அடைக்கப்படுகிறது. பின், சந்திர கிரகணம் முடிந்ததும், இரவு 9.30 மணிக்கு மீண்டும் நடைதிறக்கப்பட்டு, ராக்கால பூஜைகள் முடிந்த பின் கோயில் நடை அடைக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment