காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே


 

ஒரு கிராமத்தில் சாம்பசிவம் என்ற ஒரு அந்தணர் வசித்து வந்தார். சிறுவயது முதலே வேதம் புராணம் முதலிய சாஸ்திரங்கள் பலவும் கற்று சிறந்த மனிதராய் திகழ்ந்தார். அவர் எவ்வளவுதான் கற்றவராகவும் மற்றவருக்கு உபதேசிப்பவராகவும் இருந்தாலும் அந்த ஊரில் அவருக்கு மரியாதை இருந்ததே ஒழிய செல்வத்தைக்கொடுப்பவர் யாருமில்லை.

அவர் செய்யும் தொழிலுக்கு ஏற்றபடி செல்வத்தைக் கிள்ளிக்கொடுத்தார்களே அன்றி அள்ளிக்கொடுக்கவில்லை. அதனால் நிறைந்த செல்வத்தை அவரால் சேர்க்க இயலவில்லை. அவரது மனைவியும் இவரை கையாலாகாதவர் என ஏளனமாகப்பேசி வந்தாள்.

அதே ஊரில் தனபாலன் என்ற ஒரு வியாபாரி வாழ்ந்து வந்தார். அவர் பெயருக்கு ஏற்ற செல்வவளம் மிக்கவராகத்திகழ்ந்தார். அவரது நிலையைச் சொல்லிக்காட்டி சாம்பசிவத்தின் மனைவி செல்வத்தைச்சேர்க்கும் வழியை பின்பற்றும்படி கூறிவந்தாள்.

அதனால் சாம்பசிவம் அடுத்த ஊருக்குச்சென்று பணம் சம்பாதித்து வருவதாக கூறி புறப்பட்டார்.

அதேநாளில் தனபாலனும் தன் வியாபாரத்தின் நிமித்தமாக தன்வண்டியில் ஏறிக்கொண்டு அடுத்த ஊருக்குப்புறப்பட்டார். இருவரும் ஒரே பாதையில் போய்க்கொண்டு இருந்தனர். தனபாலனின் வில்வண்டி ஜல்ஜல் என்று ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் சாம்பசிவமோ வேர்க்க விறுவிறுக்க நடந்து போய்க்கொண்டு இருந்தார்.

இந்த இருவரின் நிலையையும் வைகுண்டத்திலிருந்த மகாலட்சுமி தாயார் பார்த்தாள். பின், அருகே சயனத்திலிருந்த வைகுண்ட நாயகனான நாராயணனைப்பார்த்தாள்.

கண்களை மூடிப்படுத்திருந்த அந்த மாயக்கண்ணன் புன்னகை புரிந்தார். அவரது புன்னகையைக் கண்டு பொறுக்காத லக்ஷ்மி "சுவாமி, இது என்ன அநீதி..?; சதா வேதம் ஓதிக்கொண்டு உங்களையே ஸ்மரித்துக்கொண்டு இருக்கும் இந்த அந்தணருக்கு ஏன் இந்த நிலை? அவருக்கு செல்வ வளத்தை தரக்கூடாதா?" என்றாள் சற்றே கோபத்துடன்.

அதே புன்னகையுடன் நாராயணர் "என்ன லக்ஷ்மி நீதானே தனத்துக்கு அதிபதி? செல்வத்தை அள்ளிக்கொடுக்க வேண்டியதுதானே?" என  புன்சிரிப்போடு  "நானே கொடுக்கிறேன் சுவாமி" என்றவளைத் தடுத்தார் நாராயணர். "லக்ஷ்மி, அவனுக்கு இந்த ஜென்மாவில் செல்வத்தை அனுபவிக்கும் பேறு இல்லை. நீ கொடுத்தாலும் அதை அவன் அனுபவிக்க மாட்டான்." என்றார் .

"கொடுப்பவள் தனலட்சுமி சுவாமி. அவனுக்கு செல்வம் எப்படி சேருகிறது என்று பாருங்கள்" என்றவளைப் பார்த்து புன்னகைத்த நாராயணர், "சரி. உன் விருப்பப்படியே அவனுக்கு செல்வம் கொடு. ஆனால் இரண்டு முறைதான் கொடுக்கவேண்டும்" என்று அனுமதியளித்தார்.

மகாலக்ஷ்மியும் மிகவும் மகிழ்ச்சியுடன் தன் கையிலிருந்து ஒரு பொன்மூட்டையை அந்த அந்தணர் சாம்பசிவம் நடக்கும் வழியில் போட்டாள். எப்படிப்பணம் சம்பாதிப்பது என்ற எண்ணத்துடன் போய்க் கொண்டிருந்த சாம்பசிவத்துக்கு திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. "நமது ஐம்புலன்களும் நன்றாக இருக்கும் போதே நம்மால் விரைவாக நடக்க இயலவில்லையே கண்ணில்லாதவர்கள் எப்படி நடப்பார்கள்? நாமும் கண்ணில்லாமல் நடந்து பார்ப்போம்" என்ற எண்ணத்துடன் தன் இருகண்களையும் மூடிக்கொண்டு நடந்தான் சாம்பசிவம்.

அதே சமயம் தன் கையிலிருந்த பொன்மூட்டையை அவன் முன் போட்டாள் மகாலட்சுமி. கண்களை மூடிக்கொண்டு நடந்த சாம்பசிவம் அந்த மூட்டையை தாண்டிச்சென்று தன் கண்களைத் திறந்தான். "அப்பாடா, கண்ணில்லாமல் நடப்பது ரொம்ப கஷ்டம்தான். ஆண்டவா எனக்கு நல்லபடியாகக் கண் கொடுத்திருக்கும் உனக்கு கோடானுகோடி நன்றி" என்று இருகை கூப்பி வணங்கிவிட்டு நடந்தான்.

வைகுண்ட நாராயணன் சிரித்தார். "என்ன தேவி, உன் பக்தன் நீ கொடுத்த தனத்தை ஏற்கவில்லை போலிருக்கிறதே?" எனக்கேட்டார் . "சுவாமி, இன்னொருமுறை முயற்சித்துப்பார்க்கிறேன்" என லட்சுமி கோரிக்கை வைத்தாள். "சரி உன் விருப்பம்."என்று அனுமதி அளித்தார் இறைவன். இம்முறை அவன் கண்களில் படும்படி அந்த திரவிய மூட்டையை அவன் நடக்கும் பாதையில் போட்டாள் தேவி.

தன் முன் கிடக்கும் அந்த மூட்டையை கையில் எடுத்தான் அந்த ஏழை பிராம்மணன். மகாலட்சுமி மனம் மகிழ்ந்தாள். நாராயணனை சற்றே கர்வத்துடன் பார்த்தாள். இப்போதும் இறைவன் புன்னகைத்தார். "லக்ஷ்மி என்ன நடக்கிறது என்று பார். உன் விருப்பம் நிறைவேறினால் எனக்கும் மகிழ்ச்சியே. என்ன செய்வது அவன் கர்மபலனை அவன்தான் அனுபவிக்க வேண்டும்" என்றார் பெருமூச்சுடன்.

அதே சமயம் கையில் எடுத்த செல்வத்தை பிரித்துப்பார்த்த சாம்பசிவம் அச்சமும் ஆச்சரியமும் கொண்டான். மக்கள் அதிகம் நடமாடாத அந்தப் பாதையில் யார் இந்த மூட்டையைப்போட்டிருப்பார்? யாரேனும் தேடிவருவார்களா என்று அங்கேயே காத்திருந்தான். அப்போது சாம்பசிவத்துக்கு முன்னாலேயே அடுத்த ஊர் சென்று அடைந்த தனபாலன் தன் வியாபாரத்தை முடித்துக்கொண்டு திரும்பிக்கொண்டு இருந்தான். அங்கே அமர்ந்திருந்த சாம்பசிவனைப் பார்த்து ஏன் இங்கேயே தங்கி விட்டாய்? என்று விசாரிப்பதற்காக வண்டியை மெதுவாக விடச்சொன்னான். தான் தவற விட்ட திரவியத்தைப் பற்றி கேட்கத்தான் வந்துள்ளான் என நினைத்த சாம்பசிவம் தன்னிடமிருந்த மூட்டையைக்கொடுத்து "ஐயா, தாங்கள் தவறவிட்ட மூட்டை இதுதானா? நீங்கள் வருவீர்கள் என்றுதான் காத்திருந்தேன். இந்தாருங்கள் உங்கள் செல்வம்" என்று அந்த மூட்டையை தனபாலனிடம் கொடுத்தான்.

தனபாலனும் அதை பெற்றுக்கொண்டு விரைந்து ஊர் வந்து சேர்ந்தான். மிகுந்த நல்லகாரியம் செய்து விட்டதுபோல் சாம்பசிவனும் மகிழ்ச்சியுடன் தன் பயணத்தைத்தொடர்ந்தான்.

நாராயணன் "பார்த்தாயா தேவி தனலக்ஷ்மியே கொடுத்தாலும் அந்த செல்வம் அவனைச் சேரவில்லை பார். இது அவனது பூர்வ ஜன்ம வினை" என்றார் அதே புன்னகையோடு. இப்போது மகாலட்சுமி நாராயணனைப் பார்த்து "நானே நினைத்தாலும் ஒருவனை செல்வந்தனாக ஆக்கமுடியாது அவரவர் செய்த புண்ணியங்களும் பாவங்களுமே அவர்களின் சுக துக்கங்களை முடிவு செய்கின்றன என்பதைப் புரிந்து கொண்டேன் சுவாமி" என்று கூறி தலைவணங்கி நின்றாள்.

 

 இன்றைய காலத்தில் நாம் அனைவரும்  பணமே பிரதானம் என்று பணத்தின் பின் ஓடிக் கொண்டிருக்கிறோம் . ஆனால் கடைசியில் நம்முடன் கூட வரப் போவது ,  நாம் வாழும் காலத்தில்  செய்த பாவ புண்ணியங்கள் தான் .

காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே"  என்றார் பட்டினத்தார் உடைந்து போன ஊசியைக்கூட செத்த பின்னால் மனிதனால் கொண்டு செல்ல முடியாது  . இந்த உண்மையை நாம் உணரும் தருணம் இவ்வுலகத்தில் மேலும் அழியும் உடலின் மீதும் நாம் வைக்கும் பந்தம் அறுந்துப் போகும் . அழியாத செல்வமாகிய நற் சிந்தனையை விதைக்க தொடங்குவோம் .



Leave a Comment