திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் புஷ்ப யாகம்


கோதண்டராமர் பிறந்த திருநட்சத்திரத்தையொட்டி திருப்பதியில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் நேற்று 18 வகையான மலர்களால் புஷ்ப யாகம் நடந்தது.
திருப்பதியில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் நேற்று மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை புஷ்ப யாகம் நடந்தது. இந்தப் புஷ்ப யாகம் கோதண்டராமர் பிறந்த திருநட்சத்திரத்தையொட்டி நடந்தது. முன்னதாக, மதியம் சீதா, லட்சுமணர் சமேத ராமச்சந்திரசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
அதைத்தொடர்ந்து மல்லிகை, ரோஜா, சம்பங்கி, கனகாம்பரம், சாமந்தி உள்பட 18 வகையான மலர்களை கூடைகளில் நிரப்பி கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் 18 வகையான மலர்களால் உற்சவ மூர்த்திகளான சீதா, லட்சுமணர், ராமச்சந்திரசாமிக்கு புஷ்பார்ச்சனை செய்யப்பட்டது.



Leave a Comment