தவம் பலித்தது... அனுமன் வந்தான்! மேலூர் விஸ்வரூப தரிசனம்
ஸ்ரீரங்கம் மேலூர்: 37 அடி விஸ்வரூப ஆஞ்சநேயரின் சிலிர்க்க வைக்கும் பின்னணி!
திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூர் கிராமத்தில், தென் அயோத்தி ஸ்ரீ ராம பட்டாபிஷேக சஞ்ஜீவன் ஆஞ்சநேயர் என்ற பெயரில் 37 அடி உயரத்தில் பிரம்மாண்ட அனுமன் சிலை எழுப்பப்பட்டுள்ளது. இக்கோயில் உருவான விதம் ஒரு ஆன்மீக அதிசயம்.
தவத்திற்கு கிடைத்த வரம்,
கோயில் நிர்வாகி திரு. வாசுதேவன் அவர்கள் 21 நாட்கள் நீர் மட்டும் அருந்தி மேற்கொண்ட கடும் ராம ஜபத் தவத்தின் பயனாக, அனுமன் நேரில் தோன்றி, "உலக சுபிட்சத்திற்காகவும், பக்தர்களின் குறைகளைத் தீர்க்கவும் நான் உன் மனதிலும் இந்த இடத்திலும் குடிகொள்வேன்" என வாக்களித்தார்.
41 அடியில் விஸ்வரூபம்,
அனுமனின் உத்தரவுப்படியே, 108 டன் எடையில், தலை முதல் பாதம் வரை 37 அடி மற்றும் 4 அடி பீடம் என மொத்தம் 41 அடி உயரத்தில் இச்சிலை செதுக்கப்பட்டது. கையில் ஜெபமாலையுடன், சதா ராம நாமத்தை உச்சரித்தபடி தெற்கு நோக்கி ஆஞ்சநேயர் இங்கு அருள்பாலிக்கிறார்.
வழியில் நடந்த அதிசயம்,
சிலையை லாரியில் கொண்டு வந்தபோது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. மேலூர் கிராமத்து சாலையின் அகலம் வெறும் 11 அடி; சிலையை ஏற்றி வந்த லாரியின் அகலமோ 10.45 அடி. எவ்வித இடையூறுமின்றி, ராமாயணத்தில் அனுமன் தன் உடலைச் சுருக்கிக் கொண்டது போல, அந்த குறுகிய பாதையில் விஸ்வரூப அனுமன் ஊருக்குள் வந்து சேர்ந்தார்.
பக்தர்களுக்கு ஓர் அழைப்பு,
"கோயில் திருப்பணி செய்பவர்கள் இல்லத்தில் இறைவன் எப்போதும் குடியிருப்பான்" என்பது ஐதீகம். சனிக்கிழமைகளில் விசேஷ அலங்காரத்தில் காட்சியளிக்கும் இந்த ஆஞ்சநேயரை, வரும் அனுமன் ஜெயந்தி அன்று தரிசித்து, உங்கள் துன்பங்கள் நீங்கி நன்மைகள் பெற கோயில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment