தேவாரத்தின் முத்துக்கள்: திருஞானசம்பந்தர் பாடிய பசுபதீசர் துதி
தேவாரத்தின் முத்துக்கள்: திருஞானசம்பந்தர் பாடிய பசுபதீசர் துதிசிவபெருமானை பற்றிப் பாடப்பட்ட பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ‘தேவாரம்’ என அழைக்கப்படுகின்றன. இதில்,
முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்,
நான்காம் முதல் ஆறாம் திருமுறை வரை திருநாவுக்கரசர் (அப்பர்) பாடியுள்ளார்,
ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியுள்ளார்.
தெய்வத்தைப் புகழ்ந்து பாடப்பட்ட பாமாலை என்பதாலும் இதற்கு ‘தேவாரம்’ என்று பெயர் பெற்றது என்று கூறப்படுகிறது.
இப்போது, அந்த தேவாரப் பாடல்களில் ஒன்றைப் பார்க்கலாம்:
பாடல்
பொங்கி வரும்புனல் சென்னி வைத்தார் போம்வழி வந்துஇழிவு ஏற்றம்ஆனார்
இங்குஉயர் ஞானத்தர் வானோர் ஏத்தும் இறையவர் என்றும்இ ருந்துஊராம்
தெங்குஉயர் சோலைசேர் ஆலைசாலி திளைக்கும் விளைவயல் சேரும்
பொய்கைப் பங்கய மங்கை விரும்பும் ஆவூர்ப் பசுபதி ஈச்சரம் பாடுநாவே.
-திருஞானசம்பந்தர்
விளக்கம்
பொங்கி வரும் கங்கையைக் திருமுடியில் அலங்காரமாகக் கொண்டவராம் சிவபெருமான். மானிடர்களாகப் பிறந்து உயர்ச்சி பெற்றவர்களும், உயர்ந்த ஞானத்தினைப் பெற்ற சான்றோர்களும், வானவர்களும் துதி செய்யும் அந்த இறைவன் ஆவூரில் உறைகிறார்.
ஆவூர் என்பது எங்கும் தென்னை, மாங்கனி, கரும்பு, செந்நெல் ஆகியவை நிறைந்த வளமான வயல்களும், நீர்நிறைந்த குளங்களும், தாமரைகள் பூத்த பொய்கைகளும் கொண்ட செழிப்பான ஊர். அந்த தாமரையின் மேல் விளங்கும் திருமகள் விரும்பும் புனிதத் தலம் அது.
அத்தகைய ஆவூரில் இருந்தும் திகழும் பசுபதீச்சரத்தை நாவால் பாடி மகிழ வேண்டும் என்று சுவாமிகள் கூறுகின்றார்.

Leave a Comment