வேலின் ரகசியம் என்ன?வேல் ஏன் முருகனின் சின்னம்? அதன் தத்துவம் & வரலாறு
தமிழகத்தில் முருகன் வழிபாட்டின் முக்கிய அடையாளமாக வேல் கருதப்படுகிறது. எந்த முருகன் கோவிலிலும் வேல் இன்றி இருப்பது அரிது. இது வேலின் ஆன்மிக, தத்துவ மற்றும் புராணச் சிறப்பை வெளிப்படுத்துகிறது. சுந்தரவேல், சக்திவேல், கனகவேல், வடிவேல், கதிர்வேல், வேலாயுதம், வேலச்சாமி, வேலன் போன்ற பெயர்கள் தமிழகத்தில் பொதுவாக குழந்தைகளுக்கு சூட்டப்படுவது கூட வேலின் பெருமையை உணர்த்துகிறது.
கந்தபுராணம் முருகனின் கையில் இருக்கும் வேலின் மகத்துவத்தை விரிவாக கூறுகிறது. வேல் என்பது வெறும் ஆயுதம் அல்ல; அது வேட்டையாடல், போர்க்குணம், தலைவர் தன்மை, மறைப்பொருள், ஞானம், அசுர சக்திகளை அழிக்கும் சக்தி என்பவற்றை சுட்டிக்காட்டும் ஒரு குறியீடாக விளங்குகிறது.
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் வேல்வகுப்பு, வேல்விருத்தம் போன்ற பாடல்கள் வேலின் பெருமையை உயர்த்திக் கூறுகின்றன. வேல் விடுமினையோன், திறல்வேலன், வேல் கொண்டன்று போருத வீரன் போன்ற பல பெயர்களால் முருகனைப் போற்றியமை இலக்கியத்திலும் தெளிவாகத் தெரிகிறது. அருணகிரிநாதர் வேலின் தத்துவத்தை தீ, சூரியன், சந்திரன் போன்ற ஒளியூட்டும் சக்திகளுடன் ஒப்பிடுகிறார். அதனால் வேல் இருளை அகற்றி ஞானத்தை தரும் தெய்வீகச் சின்னமாக கருதப்படுகிறது.
வேற்கோட்டம் என்ற சொல்லாட்சி, தமிழகத்தில் வேல் முருகனைச் சுட்டிக்காட்டும் அடையாளமாக பயன்படுத்தப்பட்டதை விளக்குகிறது. இன்றும் வட ஆற்காடு மாவட்டம் திருப்பத்தூர், கோவை மாவட்டம் பூரண்டான் பாளையம், மதுரை பசுமலை அருகிலுள்ள குமரகம் போன்ற தலங்களில், கோயில் இல்லாமல் ஒரு வேல் மட்டுமே நட்டு வழிபடும் வழக்கம் தொடர்கிறது.
திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற புகழ்பெற்ற முருகன் தலங்களில், கோபுரங்களில் வேல்வடிவ சுடர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை தூரத்திலிருந்தே கோவிலின் இருப்பிடத்தைக் காட்டி, பக்தர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கின்றன.





Leave a Comment