காளஹஸ்தி கோயிலில் வெள்ளிக் கட்டிகளை விற்பனைக்கு!


காளஹஸ்தி சிவன் கோயில் பாதுகாப்பு அறையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள வெள்ளிக் கட்டிகளை விற்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு உள்நாடு மட்டுமன்றி, வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் ராகு-கேது பரிகார பூஜை செய்ய வருகின்றனர்.
பரிகார பூஜையின் போது அளிக்கும் வெள்ளி நாகர் உருவங்களை பூஜைக்குப் பின், பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இதற்கு முன் கோயில் நிர்வாகம் பூஜைக்கான நாகர் உருவங்களை ஒப்பந்தப்புள்ளி மூலம் மொத்தமாக கொள்முதல் செய்து வந்தது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் கோயில் நிர்வாகம் உண்டியலில் கிடைக்கும் வெள்ளி நாகர் உருவங்களை உருக்கி வெள்ளிக் கட்டிகளாக மாற்றி, நாகர் உருவங்களை தயாரித்து வருகிறது.
இந்நிலையில், பல்லாண்டுகளாக கோயிலின் பாதுகாப்பு அறையில் நிலுவையில் உள்ள சுமார் 17 ஆயிரம் கிலோ பழைய வெள்ளி நாகர் உருவங்களை உருக்கி, அதிகாரிகள் வெள்ளிக் கட்டிகளாக மாற்றி உள்ளனர்.
இதனை தற்போது கோயில் நிர்வாகம் ஒப்பந்தப்புள்ளி மூலம் விற்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் ரூ. 75 கோடி ரூபாய் கோயிலுக்கு வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர்.



Leave a Comment