காளஹஸ்தி கோயில் ராஜகோபுரம் பணிகள் விறு விறு....


காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் அமைக்கப்பட்டு வரும் ராஜகோபுரக் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் 1516-ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், வடக்கு ராஜகோபுரத்தைக் கட்டினார்.

அந்தக் கோபுரம் 2010-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்தது.

அதற்குப் பின், மீண்டும் அதே இடத்தில் தற்போது ராஜகோபுரம் கட்டப்பட்டு வருகிறது.

இதையடுத்து, 140 அடி உயர ராஜகோபுர கட்டுமானப் பணிகள் 2011-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி தொடங்கியது.

2 ஆண்டுகளுக்குள் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்படும் என்று அந்நிறுவனம் உறுதியிட்டுக் கூறியது. ஆனால், சில நிர்வாகக் குறைபாடு காரணமாக கோபுரம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

தற்போது ராஜகோபுரத்தின் கட்டுமானப் பணிகள் 100 அடியை எட்டியுள்ளது. 111-ஆம் அடியில் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

எனவே, ராஜகோபுரப் பணிகளை கும்பாபிஷேகத்துக்கு முன் முடிக்க வேண்டும் என்று கட்டுமான நிறுவனத்திடம் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதனால், கட்டடப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.



Leave a Comment