இந்திர விழாவிலிருந்து கதிரவன் விழாவாக மாறிய தைப்பொங்கல்: ஒரு சுவாரஸ்யமான வரலாறு!
இந்திர விழாவிலிருந்து கதிரவன் விழாவாக மாறிய தைப்பொங்கல்: ஒரு சுவாரஸ்யமான வரலாறு!
இயற்கையை வரவேற்கும் பொன்நிறத் திருநாள்:பொங்கும் மங்கலம் எங்கும் நிறைந்திட, வாசலில் கூரைப்பூ கட்டி, செங்கதிரோன் கிழக்கு வானில் தோன்றும் இளங்காளைப் பொழுதை நாம் வரவேற்கிறோம். தை மாதத்தின் முன்பனிக் காலத்திற்கு உரியது மஞ்சள் நிறம். மஞ்சள் என்றாலே பொன் போன்ற நிறம் என்று பொருள். மார்கழி மற்றும் தை மாதங்களில் மஞ்சள் நிறப் பூக்கள் அதிகமாக மலர்கின்றன. குறிப்பாகப் பரங்கிப்பூ, சாமந்திப்பூ, ஆவாரம் பூ போன்றவை மலர்ந்து கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கின்றன. நாட்டுக்கரும்பிலும் அந்த வெளிர் மஞ்சள் நிறத்தைக் காணலாம். மண்ணிலிருந்து மஞ்சள் விளைந்து அறுவடையாகி இல்லங்களுக்கு வருவதும் இந்த மாதத்தில்தான். அதனால்தான் பொங்கல் வழிபாட்டில் பரங்கி, கரும்பு, மஞ்சள் மற்றும் ஆவாரம் பூக்கள் முதன்மை இடம் பெறுகின்றன.
வரலாற்று மாற்றம்: பண்டைய தமிழகத்தில், குறிப்பாகப் புகார் மற்றும் மதுரையில் 'இந்திர விழா' மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மழை தரும் இறைவனாகக் கருதப்பட்ட இந்திரனுக்கு நன்றி சொல்ல 28 நாட்கள் இந்த விழா நடைபெற்றது. காலப்போக்கில், மழைக்கு மட்டும் நன்றி சொல்வதைத் தாண்டி, பயிர்கள் வளர ஆதாரமாக இருக்கும் கதிரவனுக்கு (ஞாயிறு) நன்றி சொல்லும் பழக்கம் தமிழர்களிடம் வலுப்பெற்றது. தெய்வங்களை முன்னிலைப்படுத்திய விழா, மெல்ல மெல்ல இயற்கை - உழவன் - கால்நடை என்ற பிணைப்பை மையமாகக் கொண்ட வாழ்வியல் விழாவாக, இன்றைய தைப்பொங்கலாக நிலைபெற்றது.
ஒளியைக் கண்டு மகிழும் விழா:பொங்கல் என்பது ஒளியைப் போற்றும் ஒரு பெரும் திருவிழா. இருளை நீக்க ஒளியை ஏற்றி வைப்பது ஒருவகை என்றால், உலகிற்கே ஒளியைத் தரும் கதிரவனைக் கண்டு மகிழ்வது பொங்கல் திருநாள்.
பொங்கல் வைக்கும் முறை:பொங்கலன்று கிழக்குத் திசையில் கதிரவனைப் பார்த்தவாறு வாசலில் பொங்கல் இடுவதே மிகச் சிறந்தது. இதற்காகச் செங்கல்லால் ஆன மண் அடுப்பைப் பயன்படுத்தி, அதன் மேல் மண்பானை அல்லது புதிய வெண்கலப் பாத்திரத்தை வைத்து 'பொங்கலோ பொங்கல்' என்று முழக்கமிட்டுப் பொங்கல் வைப்பது நமது தொன்மையான தமிழ்ச் சிறப்பாகும்.
அதிர்ஷ்டம் தரும் 7 ஆன்மீக வழிமுறைகள்:இந்த நன்னாளில் சில அறச்செயல்களைச் செய்வது வருடம் முழுவதும் நன்மைகளைத் தரும்:
கதிரவன் வழிபாடு: அதிகாலையில் நீராடி, செப்புப் பாத்திரத்தில் நீர், கருப்பு எள், வெல்லம் மற்றும் சிவப்பு மலர்களைச் சேர்த்து கதிரவனுக்கு அர்ப்பணியுங்கள்.
ஈகை (தானம்): ஏழைகளுக்கு நெய், வெல்லம் மற்றும் புத்தாடைகளைத் தானமாக வழங்குவது வாழ்வைச் செழிக்கச் செய்யும்.
உணவு தானம்: அரிசி மற்றும் உளுந்து கலந்த உணவை தானம் செய்வது கிரக தோஷங்களை நீக்கும்.
எள் பயன்பாடு: நேர்மறை ஆற்றலை அதிகரிக்க எள் உருண்டைகளை தானம் செய்யலாம்.
பசு வழிபாடு: பசுக்களுக்குப் பசுந்தீவனம் அல்லது வெல்லம் கலந்த உணவை வழங்குவது கடன் தொல்லைகளை நீக்கும்.
புனித நீராடல்: குளிக்கும் நீரில் சிறிதளவு கருப்பு எள் சேர்த்து நீராடுவது உடல் மற்றும் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும்.
சிறப்பு வழிபாடு: இந்த ஆண்டு பொங்கல் வியாழக்கிழமை வருவதால், அறிவின் இறைவனைப் போற்றும் வகையில் மஞ்சள் ஆடை மற்றும் கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுவது மங்களகரமானதாக அமையும்.
இயற்கையோடு இணைந்து வாழும் தமிழரின் பண்பாட்டைப் பறைசாற்றும் உன்னத நாளாகத் தைப்பொங்கல் இன்றும் மிளிர்கிறது.

Leave a Comment