தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன் கோயில்: நெய் அபிஷேகத்தை நீங்களே சுவாமிக்கு செய்து அருள் பெறலாம்!


தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன் கோயில்: நெய் அபிஷேகத்தை நீங்களே சுவாமிக்கு செய்து அருள் பெறலாம்!
 

ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்கிறார்கள். அதைப் போலவே, ஐயப்பனுக்கு அறுபடை வீடுகளான சபரிமலை, எருமேலி, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, பந்தளம் ஆகிய இடங்களும் உண்டு.

இவற்றைத் தவிர, நாடு முழுக்க ஐயப்ப சுவாமிக்கு ஏராளமான கோயில்கள் உள்ளன. அவற்றில் பல சபரிமலை போன்ற கடுமையான விரத விதிகளுடன் அமைந்துள்ளன. சிலவோ, பக்தர்களின் வசதிக்கேற்ப எளிய விதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட அற்புதமான ஒரு தலம்தான் செங்கோட்டை அருகேயுள்ள சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன் கோயில்.

தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டைப் பகுதியில், ஆயக்குடி - சுரண்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது சாம்பவர் வடகரை கிராமம். இங்குதான் இந்த அற்புதமான ஐயப்பன் ஆலயம் உள்ளது.

சபரிமலை போலவே இங்கும் பதினெட்டுப் படிகள் உள்ளன. அவற்றைக் கடந்து மேலே சென்றால் சந்நிதானத்தில் கருணை மூர்த்தியாக ஐயப்ப சுவாமி எழுந்தருளியிருக்கிறார். அவரது திருமுகம் பாலகனின் அப்பாவித்தனமும் அன்பும் கலந்து பக்தர்களை ஈர்க்கிறது. பக்தர்கள் இவரைத் தங்கள் குடும்ப உறுப்பினராகவோ, வீட்டுக் குழந்தையாகவோ உணர்ந்து வழிபடுகிறார்கள்.

பொதுவாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் ஒரு மண்டல காலம் கடும் விரதமிருந்து, இருமுடி சுமந்து பயணிப்பார்கள். அப்போதுதான் பதினெட்டாம் படி ஏறி சுவாமியைத் தரிசிக்க முடியும். அந்தத் தரிசனத்தில் கிடைக்கும் ஆனந்த உணர்வு அலாதியானது.

அதே ஆனந்தத்தை அளிக்கும் இடம்தான் இந்த சுதந்திர ஐயப்பன் கோயில். சபரிமலைக்குச் செல்ல இயலாத பக்தர்கள் இங்கு வந்து அருள் பெறுகிறார்கள். இங்கு சுவாமியைத் தொட்டே வணங்கலாம் என்பது பெரிய விசேஷம்.

இருமுடி சபரிமலைக்கே உரியது என்பதை உணர்த்துவதுபோல, இங்கு இருமுடி இல்லாமல் ஆண்-பெண் பேதமின்றி அனைவரும் பதினெட்டுப் படிகளை ஏறி சுவாமியை வழிபடலாம். இது வேறு எந்த ஐயப்ப கோயிலிலும் இல்லாத அற்புதமான சிறப்பு.

ஆகம விதிகளின்படி இப்படிப்பட்ட நடைமுறை இல்லை. ஆனால் இந்தக் கோயில் அமைக்கும் போது பிரச்னம் பார்த்தபோது, சுவாமி ஐயப்பனே இவ்வாறு அமைக்க வேண்டும் என்று கூறியதாக ஆலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

குளத்துப்புழையில் பாலகனாகவும், அச்சன்கோவிலில் அரசனாகவும், ஆரியங்காவில் தெய்வமாகவும், சபரிமலையில் யோகியாகவும் விளங்கும் ஐயப்பன், இங்கு குடும்ப நலனைக் காக்கும் பாதுகாவலனாக சங்கல்பித்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

சபரிமலையில் வனத்தில் பிரம்மச்சாரியாக யோகத்தில் இருக்கும் சுவாமி, இங்கு நாட்டில் தன் பக்தர்களான குழந்தைகளுடன் வாழ்பவர் போல அருள்பாலிக்கிறார். அதனால் குடும்ப நல்வாழ்வை அருளும் காப்போனாக இங்கு திகழ்கிறார்.

மிக முக்கியமான சிறப்பு: பக்தர்கள் தங்கள் தாய்-தந்தை, மனைவி-குழந்தைகளுடன் குடும்பமாக பதினெட்டாம் படி ஏறி வர வேண்டும். கருவறைக்குள் சென்று தாங்களே சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம், மாலை சாற்றலாம், நைவேத்தியம் வைக்கலாம், கற்பூர ஆரத்தி காட்டலாம். இது இக்கோயிலின் தனித்துவமான அம்சம்.

இருப்பினும் சில அடிப்படை விதிகளைப் பின்பற்ற வேண்டும்: மண்டல விரதத்தை முழுமையாகக் கடைப்பிடித்திருக்க வேண்டும்; மாதா, பிதா, குரு, தெய்வங்களை மதித்து வணங்க வேண்டும்; கணவன்-மனைவி உறவில் தூய்மையும் உண்மையான அன்பும் இருக்க வேண்டும். இவைதான் பதினெட்டாம் படி ஏறுவதற்கான தகுதிகள்.

குறிப்பாக, தவறு செய்து வருந்தி, மீண்டும் செய்யமாட்டேன் என்று உறுதி எடுத்த பக்தர்கள் தங்கள் கையாலேயே சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்யலாம். வயதான அம்மாக்கள் இவரைத் தங்கள் மகனாக நினைத்து எண்ணெய் தேய்த்து அபிஷேகம் செய்து அலங்காரம் செய்கிறார்கள். இளைஞர்கள் தந்தையாகவும், குழந்தைகள் தோழனாகவும் ஐயப்பனை உணர்கிறார்கள்.

ஐயப்ப விரதம் இருக்கும் போது குடும்பமே ஒன்றாக விரதம் இருக்கும். அப்படி குடும்பமாக இங்கு வந்து சுவாமியைத் தரிசித்தால் கிடைக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. இந்த அற்புத அனுபவத்தை சுதந்திர ஐயப்பன் கோயில் நமக்கு அளிக்கிறது.

சபரிமலையிலிருந்து திரும்பிய பிறகு சில பக்தர்கள் ஒரு மண்டல விரதம் இருந்து குடும்பத்துடன் இங்கு வந்து வழிபடுகிறார்கள். வாய்ப்பு உள்ள அனைவரும் ஒரு முறையாவது இந்தத் தலத்துக்குச் சென்று ஐயப்பனின் அன்பு தரிசனத்தைப் பெற்று ஆனந்தம் அடையுங்கள்!



Leave a Comment