மார்ச் 3 அன்று திருப்பதி செல்பவரா நீங்கள்? 10 மணி நேரம் நடை சாத்தப்படுகிறது முழு விவரம்!
சந்திர கிரகணம் 2026: மார்ச் 3ஆம் தேதி திருப்பதி கோயில் சுமார் 10 மணி நேரம் மூடல்
திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் தற்போது மார்கழி விழாவுடன் வைகுண்ட ஏகாதசி கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புத்தாண்டு தொடக்கத்திலிருந்தே தினசரி 80,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஜனவரி 1 முதல் 4ஆம் தேதி வரை தினமும் 65,000 முதல் 88,000 வரை பக்தர்கள் வந்துள்ளனர்.
வரிசை அறைகள் நிரம்பி வழிகின்றன; கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ஜனவரி 8ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி முடிவடைந்த பிறகு கூட்டம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதத்தில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று கூறப்படும் நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பக்தர்கள் முன்கூட்டியே தங்கள் யாத்திரையைத் திட்டமிட உதவும் வகையில் இது வெளியிடப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 3ஆம் தேதி நிகழ்கிறது. இதனால் அன்று திருப்பதி ஏழுமலையான் கோயில் காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூடப்பட்டிருக்கும். கிரகணம் பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.47 மணி வரை நீடிக்கும் – சுமார் மூன்றரை மணி நேரம்.
கிரகண காலத்தில் கோயில்களை மூடுவது வழக்கம். வைகானச ஆகம விதிப்படி, கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரம் முன்பே நடை சாத்தப்படும். எனவே காலை 9 மணியிலிருந்து மூடல் அமலுக்கு வருகிறது. கிரகணம் முடிந்த பிறகு ஆலய சுத்திகரிப்பு (சுத்தி) மற்றும் தோஷ நிவாரண சடங்குகள் நடைபெற்று, இரவு 8.30 மணிக்கு மேல் மீண்டும் தரிசனம் தொடங்கும்.
இந்நாளில் அஷ்டதல பாத பத்மாராதனை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மார்ச் மாதம் திருப்பதி செல்லத் திட்டமிடும் பக்தர்கள் இதை மனதில் கொண்டு ஏற்பாடு செய்யுமாறு TTD கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Comment