வைகுண்ட ஏகாதசி: திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு!


ஓம் நமோ வேங்கடேசாய: திருப்பதியில் திறக்கப்பட்டது வைகுண்ட வாசல்! தங்க ரதத்தில் ஏழுமலையான் உலா! 


திருமலை திருப்பதி திருத்தலத்தில், வைகுண்ட ஏகாதசி எனும் மகா புண்ணிய தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1:30 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது. மார்கழி மாதக் குளிரையும் பொருட்படுத்தாமல், கோவிந்தா முழக்கத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரண்டுள்ளனர்.

முக்கிய பிரமுகர்கள் தரிசனம் 
தனுர் மாத சுபமுகூர்த்தத்தில் நடை திறக்கப்பட்டதும், முதலில் முக்கியப் பிரமுகர்கள் வைகுண்ட வாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர். தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசித்து அருள்பெற்றனர். காலை 6 மணி முதல் பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தங்க ரதத்தில் ஜொலித்த மலையப்ப சுவாமி 
இன்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி பொன்னிறமாக ஜொலிக்கும் தங்க ரதத்தில் எழுந்தருளினார். நான்கு மாட வீதிகளிலும் சுவாமி உலா வந்தபோது, திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆராதனை காட்டி பரவசத்துடன் வழிபட்டனர்.

பக்தர்களுக்கு தேவஸ்தானத்தின் கனிவான வேண்டுகோள் 
டிக்கெட் உள்ளவர்களுக்கு மட்டும்: இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு ஏற்கனவே தரிசன டிக்கெட் வைத்துள்ள பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இலவச தரிசனம்: நேரடி இலவச தரிசனம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஜனவரி 2 முதல்: நேரடி இலவச தரிசனம் (வைகுண்ட துவார தரிசனம்) மீண்டும் ஜனவரி 2-ம் தேதி முதல் தொடங்கும்.

பக்தர்களுக்கான வசதிகள் (அன்னதானம் & லட்டு)  லட்டு
தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய சவுத்ரி அவர்கள் கூறுகையில், வரும் 8-ம் தேதி வரை தினமும் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு 16 வகையான உணவுகள், டீ, காபி மற்றும் குழந்தைகளுக்குப் பால் வழங்கப்படுகிறது.

சுவாமி பிரசாதமாக 4.50 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் உள்ளன.

பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்தால் 2 முதல் 3 மணி நேரத்திற்குள் எளிதாக தரிசனம் பெறலாம்.

இந்த வைகுண்ட ஏகாதசி நன்னாளில், அந்த வேங்கடவன் அனைவருக்கும் எல்லா நலன்களையும் வழங்க பிரார்த்திப்போம்! 



Leave a Comment