திருவாரூர் தியாகராஜரும் அதன் ரகசியமும்!
ஆன்மீக வரலாற்றில் ‘விடங்க லிங்கங்களுக்கு’ தனி மகத்துவம் உண்டு. இந்த லிங்கங்கள் உருவான கதையும், அவற்றை முசுகுந்த சக்கரவர்த்தி தேவேந்திரனிடமிருந்து பெற்று வந்த வரலாறும் மிகவும் சுவாரசியமானது.
ஒருமுறை இந்திரனுக்கு ஏற்பட்ட பெரும் ஆபத்தை முசுகுந்தன் தன் வீரத்தால் முறியடித்தார். அதற்கு கைமாறாக, திருமால் தன் நெஞ்சில் வைத்துப் பூஜித்த ‘விடங்க லிங்கத்தை’ முசுகுந்தன் கேட்டார். தேவர்களுக்குரிய அந்த அரிய பொக்கிஷத்தை ஒரு சாதாரண மனிதனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை.
மயனைக் கொண்டு அதேபோல் ஆறு லிங்கங்களைச் செய்து கொடுத்து முசுகுந்தனை ஏமாற்றத் துணிந்தார் இந்திரன். ஆனால், முசுகுந்தன் தன் பக்தியால் அசல் எது என்பதை எளிதாகக் கண்டறிந்துவிட, வேறு வழியின்றி ஏழு லிங்கங்களையும் அவரிடமே ஒப்படைத்தார் இந்திரன்.
அந்த ஏழு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களே ‘சப்த விடங்கத் தலங்கள்’. திருவாரூரில் அசல் லிங்கமான வீதி விடங்கரும்; திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம் மற்றும் திருக்காரவாசல் ஆகிய இடங்களில் முறையே நகர, சுந்தர, அவனி, நில, புவனி மற்றும் ஆதி விடங்கர்களும் அருள்பாலிக்கின்றனர்.
செல்வம் கொழிக்க பௌர்ணமி வழிபாடு
திருவாரூர் கோயிலின் தலவிருட்சமான பாதிரி மரத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. பௌர்ணமி நாளில் இந்த மரத்திற்கு பாலும் நாட்டுச்சர்க்கரையும் கலந்து ஊற்றி, இந்திரனையும் மகாவிஷ்ணுவையும் மனதார நினைத்து வன்மீக நாதரை வழிபடுங்கள். உங்கள் வீட்டில் குபேர சம்பத்து நிலைத்திருக்கும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் தானாகத் தேடி வரும் என்பது ஐதீகம்.
ஜாதக தோஷங்களுக்கான எளிய பரிகாரங்கள்
தொழில் லாபம் பெருக: உங்கள் ஜாதகத்தில் நான்காம் இடத்தில் சந்திரன் இருந்தால், கடல் கடந்து வாணிபம் செய்யும் யோகம் அமையும். இந்த யோகம் கைகூட, திருவோணம் நட்சத்திரத்தன்று கமலாலய சங்கு தீர்த்தத்தில் நீராடி அர்ச்சனை செய்யுங்கள். அந்தத் தீர்த்தத்தில் நாட்டுச்சர்க்கரை மற்றும் ஜவ்வாது கலந்து வெள்ளிப் பாத்திரத்தில் வீட்டில் வைத்துப் பாருங்கள்; முடங்கிய தொழிலில் கூட லாபம் குவியும்.
செவ்வாய் தோஷம் விலக: செவ்வாய் தோஷம் அல்லது ரத்த அழுத்தம் (BP) உள்ளவர்கள், இத்தலத்து மீனாட்சி குங்குமத்தால் அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தில் 48 நாட்கள் பிள்ளையார் பிடித்து வழிபட வேண்டும். 48 நாட்கள் கழித்து அதனை மீண்டும் இத்தலத் தீர்த்தத்திலேயே கரைத்துவிட்டால், தோஷ பாதிப்புகள் அடியோடு நீங்கும்.
அரசியல் வெற்றிக்கு: ஜாதகத்தில் 4-ல் சூரியனோ அல்லது செவ்வாயோ இருப்பவர்கள் அரசியலில் ஜொலிக்க ஒரு வழி உண்டு. உத்திராடம் அல்லது அவிட்ட நட்சத்திரத்தன்று சுவாமிக்கு மஞ்சள் பட்டு சாத்தி, தங்கம் அல்லது வெள்ளியில் ‘வேல்’ காணிக்கை அளித்து ‘இந்திர அர்ச்சனை’ செய்வது சிறந்தது. இது அதிகாரமிக்க பதவிகளைத் தேடித்தரும்.
பொதுவாகவே, எந்தச் சிவத்தலத்தில் அமர்ந்து ‘கோளறு பதிகம்’ பாடினாலும் நவகிரக தோஷங்கள் நம்மை அண்டாது என்பது முன்னோர்கள் வாக்கு.

Leave a Comment