சித்தர்கள்  போற்றிய மௌன குரு


- "மாரி மைந்தன்" சிவராமன்

மதுரையம்பதியில் மாசுமருவற்ற 
வைதீக தெலுங்கு
பிராமணர் குலத்தில் அவதரித்தது 
ஓர் ஆண் மகவு.

தந்தை 
சோமநாத அவதானியார். தாய்
பார்வதி அம்மை.
காலம் 
18ஆம் நூற்றாண்டு.

அக்குழந்தைக்குப்
பெற்றோர் வைத்த பெயர் சிவராமகிருஷ்ணன்.
வீட்டில் விரும்பி அழைத்த செல்லப்பெயர் 
பிச்சுக்குப்பன்.

தந்தை சோமநாதரே
பெரிய யோகி.
தாய் பார்வதி
சிவபக்தை.

இருவரும் ராமேஸ்வரம் யாத்திரை சென்று நீண்டநாள் 
பிள்ளையில்லா குறையை இறை முன்வைத்து சத்புத்திரன் வேண்டும் என்று தொழுதபடி இருந்தனர்.

இறையனார்
இருவர் கனவிலும்
ஒரே சமயத்தில் தோன்றி 'சத்புத்திரனே பிறப்பான்' என்று உறுதி தந்தார்.

அப்படித் தவமாய் தவமிருந்து வந்துதித்த அக்குழந்தை....
ஓர் ஞானக் குழந்தையென ஒரு சில நாட்களிலேயே பெற்றோருக்குப் புரிய ஆரம்பித்தது.

ஆம்....
விளையும் பயிர் முளையிலேயே தெரிந்தது. 

முற்பிறப்பில் கற்றதெல்லாம் இப்பிறப்பிலும் அப்படியே நிறைந்திருந்தது.

குருகுலக் கல்வி உறுதுணை செய்ய படிப்படியாய் 
வளர்ச்சி கண்டது.

 வடமொழி வசமானது.

தெலுங்கராய் பிறந்தும் தமிழராய் தவழ்ந்தும் இறையருள் கூடி சமஸ்கிருத ஞானம் நிறைந்து நின்றது.
பற்பல பல கலைகள்....

கற்றுத் தந்தவரே 
போற்ற 
சிறந்து விளங்கினான்
சிறுவன் சிவராமகிருஷ்ணன்.

'பால பருவத்திலேயே திருமணம் '
அக்கால மரபு.

எனவே
பள்ளிப் பருவத்திலேயே 
தெலுங்கு பிராமணர் முறைப்படி 
கல்யாணம் 
இனிது முடிந்தது.

பால விவாகம்
நூல்கள் படிப்பதற்கும் கல்வி கற்பதற்கும் இடையூறாய் இல்லை.

சிறு பிராயத்திலேயே கல்வி கேள்விகளில் சிறந்திருந்தான் சிவராமகிருஷ்ணன்.

அவனைக் 
கண்ட மாத்திரத்திலேயே  'ஆகா...பேஷ்... .. பேஷ் '
என்று வியந்து 
வாழ்த்தினர் 
ஆன்றோரும் சான்றோரும்,

எல்லாம் சரியாகத்தான் போனது. 
வீட்டில் ஒரு விழா அமர்க்களமாய் 
நடக்கும் வரை.

அது சமயம்
சிவராமகிருஷ்ணனின் பிஞ்சு மனைவி பூப்படைந்திருந்தாள்.

வீடு விழாவாக களைகட்டியிருந்தது. உறவினர் நண்பர்கள் உளம் மகிழ்ந்து கூடியிருந்தனர்.

ஆளாளுக்கு ஒரு வேலை. பரபரப்பாய் இருந்தது வீடு.

சிவராமகிருஷ்ணன் அன்றும் விடுப்பெடுக்காது கல்வி கற்க பாடசாலை சென்றுவிட்டான். 

வீடு திரும்பிய வேளை
வீட்டில் கூப்பாடும் கும்மாளமும் நிறைந்திருந்தது.

விருந்து  அப்போது தான் தயாராகிக் கொண்டிருந்தது.

சிவராமகிருஷ்ணனுக்கு அது பசி வேளை. கல்விச்சாலை செல்லும் அவசரத்தில் பாவம்....
காலையிலும் உண்ணவில்லை.

"பசிக்கிறது' என்றான்.
நண்பர்கள் பரிகசித்தனர்..

"அடேய்... என்ன பசி ?
அந்தப் பசியா....?! "

அன்றைய விழா முடிவில் சாந்திமுகூர்த்தம் என்பது மரபு.
எனவே அவர்கள்
கேலியில் 
அர்த்தம் இருந்தது. 

அடுப்படி சென்று அம்மாவைக் கேட்டான் "அம்மா பசிக்கிறது...
அன்னம் வேண்டும்.."

"டேய் பிச்சு ....
அச்சு பிச்சுன்னு அலையாதே....
பசி பொறுத்துக்கோடா ...

ஒரு நாள் பட்டினி கிடந்தால்
குடிமுழுகிப் போய்விடாது..

பேசாம இங்கேயே உட்கார்ந்து இரு..."

போகிறபோக்கில் கடுப்பாய்
அலட்சியமாய் சொல்லிவிட்டு 
ஒரு மூலையைக் காட்டினாள்,
அவசரகதியிலிருந்த அன்னை.

அறிவுப் பசி
நிறைந்திருப்பதைப்போல வயிற்றுப் பசியும்
நிறைய வேண்டும் 
என நினைத்திருந்த சிவராமகிருஷ்ணன்  யோசிக்க ஆரம்பித்தான்..

நேரம் ஆக ஆக
பசி பொறுமையைச் சோதித்தது. 

உற்ற நண்பர்களின் 
கேலி வெறுப்பேற்றியது.

பெற்ற தாயின் உதாசீனம் சிந்திக்க வைத்தது.

சிவராம கிருஷ்ணனின்
திருமணத்தன்று கூட இப்படித்தான்.

கல்யாண கலகலப்பில் மாப்பிள்ளையை யாரும் கண்டு கொள்ளவில்லை. மணமகனுக்குப் பசிக்கும் என யாருக்கும் 
தோன்றவே இல்லை.

அவரவர் வேலையில் அவசரமாய் இருந்தனர்.

இன்றும் அதே நிலை.

சிந்தனை தலைதூக்கியது. மகிழ்ச்சி மறைந்தோடியது.

புதிய எண்ணம் பூத்தது.

எல்லாம்  வேஷம் 
சுற்றம் 
உற்றம்
நட்பு
உறவு
தாய் 
மனைவி 
எல்லாமே வேஷம்.

ஒருவன் பசியால் 
செத்துக் கொண்டிருந்தால் கூட 
இவர்களுக்கு கவலையில்லை.

காலன் வந்து கவர்ந்து சென்றாலும் 
தடுக்க வரமாட்டார்கள்."

பூத்த எண்ணம்
பூங்கொத்தாய்
விரிந்தது.

கபிலவஸ்துவின் அரசிளங்குமரன்
ஒரு நொடியில் முடிவெடுத்து 
அரண்மனை துறந்தது துறவறம் பூண்டது, 
ஞானம் பெற்றது நினைவுக்கு வந்தது.

சித்தார்த்தன் 
கௌதம புத்தர் 
ஆன காட்சி 
மனதின் சாட்சியானது.

திருவெண்காடர்
'காதற்ற ஊசியும் 
வாராது காண் கடைவழிக்கே '
என்ற இறைவாக்கை உணர்த்த ஒரு நொடியில் பட்டினத்து அடிகள் ஆனது நினைவில் வந்து நின்றது.

ஒரே நொடிதான்.
ஒரே ஒரு நொடிதான். 
அந்த நொடி
வாழ்வின் போக்கையே மாற்றி விடும்.

சிவராமகிருஷ்ணன் 
அந்த ஒரு நொடியில் முடிவெடுத்தான்.

'உண்மை வேறு '
என்ற 
உண்மைத் தேடலில் விடைகொடுத்தான் விருந்திற்கு..
விழாவிற்கு... விருந்தினர்க்கு....
உறவுக்கு.....
வீட்டுக்கு .

வீட்டை விட்டு வெளியேறினான்.

அப்போதும் 
அவனுக்குப் 
பசி இருந்தது.

அது வேறு பசி....
ஆசிரியர் கற்பிக்கும் அறிவுப்பசி அல்ல...
வேறு பசி...
குரு தீர்க்வல்ல
ஞான பசி....

தேடல்....
உண்மையைத் தேடும் தேடல்..
இறை தேடல்..
இரை தேடல் அல்ல...
இறை தேடல்.

இல்வாழ்க்கை விடுத்து 
இறை வாழ்க்கையை நிறையெனக்  கொண்ட இளம் வாலிபனின்
இறை தேடல்...
நிறை தேடல் ...
ஞானத் தேடல்...

சிவராமகிருஷ்ணனின் கால்கள் சென்ற இடம் கும்பகோணம் ஸ்ரீமடம். முன்பு
கல்வி பெற்ற குருகுலம்.

அங்கு தான் 
சிவராமகிருஷ்ணனின் குருகுல குரு 
பரமசிவேந்திர சாஸ்திரி வீற்றிருந்தார்.

சிவராமகிருஷ்ணன் கண்கள் அவரை தரிசித்தன.
கரங்கள் குவித்தபடியே
தாழ்பணிந்தான். சரணடைந்தான்.

சிவராமகிருஷ்ணனின் விருப்பத்தையும் வைராக்கியத்தையும் அறிந்த குருநாதர் வியந்தார்.

அதுவே பக்குவ நிலை என்பதை அனுபவித்தறிந்திருந்த குருநாதர்
தன்  மாணவன்
உலக வாழ்க்கையின் இன்ப துன்பங்களை வெறுத்துவிட்டு வந்திருப்பதைப் பாராட்டி அரவணைத்தார்.

அன்றே அப்போதே
உபதேசம் 
ஆரம்பம் ஆனது.

முன்பே 
குருகுலக் கல்வி முடிந்தவுடன் திருவிசைநல்லூர் சென்று ராமையா சாஸ்திரிகளிடம் வேதாந்தம் கற்றிருந்ததும்
'அய்யர்வாள் '
என அறிஞர்களால் போற்றப்பட்ட 
ஸ்ரீதர வெங்கடேசர் என்கின்ற 
போதேந்திர சுவாமிகள், பிச்சாண்டார்கோவில் மகாபாஷ்யம் 
கோபால கிருஷ்ண சாஸ்திரிகள் 
ஆகியோரிடம்  
ஆழப் பயின்றிருந்த
வேத நுட்பங்களும்
சிவராமகிருஷ்ணனை
விரைவில்  ஞானம் பெற்றவனாக்கின..

அது இறை விருப்பம்  அன்றி வேறு என்னவாயிருக்க முடியும் ?

குரு பரமசிவேந்திரா 
பரமே சிவனென
திகழ்ந்த 
சிவம் திகழ்ஞானி.

அவர்தம் 
மடம் வந்த வேளை
சிவராமகிருஷ்ணனின் பசிப்பிணி முற்றிலும் பறந்து போனது.

பசி என்ற சொல்லே 
அதன் பின்னர்
அவன் வயிற்றிலும் 
வாயிலும் 
ஏன் சிந்தையிலுமே எழவில்லை.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் சிவராமகிருஷ்ணன் 
குரு மெச்சும் சீடனாய் 
வேதாந்த வித்தகனாய் தர்க்கத்தில் வல்லவனாய் சாஸ்திர ஞானியாய் மிளிர்ந்து ஒளிர்ந்தார்.

ஸ்ரீமடமெங்கும்
சிவராமகிருஷ்ணன் பற்றிய பேச்சே இருந்தது பாராட்டும் மிகுந்தது.

ஒரு நாள்....
பரமகுரு 
பரம சிவேந்திரா 
சிவராம கிருஷ்ணனை அழைத்தார்.
 
கும்பகோணம் 
ஸ்ரீ மடமே 
உச்சியில் வைத்துக் கொண்டாடியவனை
உச்சி முகர்ந்து 
"நீ உச்சத்தில் ஜொலிக்க வேண்டியவன் "
மெல்ல சொன்னார்.

கூடவே 
பெயர் மாற்றம் தந்தார்.

 சதாசிவன் என்னும்
 புதுப் பெயரைச் சூட்டினார்.

"ஈஸ்வர சொருபங்களுக்கெல்லாம் அதிபதியே சதாசிவம்.

சதா சிவத்துடன் இணைந்திருப்பவள் உலகாளும் உமையவள் மனோன்மணி .

அவளே சித்தர்கள் வணங்கிய தெய்வம்.

அவள் துணையின்றி உயர்நிலை 
உய்ய முடியாது... 

நீ இனி
சதா சிவமென இரு ."

சதாசிவ - மனோன்மணி பெருமைகளை 
எடுத்துக் கூறி 
சீடருக்கு 
சதாசிவன் 
என நாமம் சூட்டினார் குருநாதர்.

பின்னாளில் 
யோக சித்திகளில் 
சிறந்து 
உலகை ஆளப்போகும் சீடருக்கு 
சதாசிவம்
என பெயரிட்டது வீண்போகவில்லை.

அச் சீடர்
அகிலம் வணங்கும் பேராற்றல் கொண்டவராக
வல்லமை நிறைந்தவராகவே
வலம் வந்தார்.

'திருமூலருக்கு 
அடுத்து 
யோக சாதனைகள் அனைத்தும் 
முழுதாய் செய்தவர்'
என சித்தர் பரம்பரை பிரமித்து சுட்டிக்காட்டும் யோக சித்தராக விளங்கினார். 

'மௌன குருவே'
என 
தாயுமானவரால் துதிக்கப்பட்ட
அவர் ....

பற்றற்றவர்..
பேச்சற்றவர்...
உடையற்றவர்....
உணர்வற்றவர்..... 
அவர்....... 

பிரம்மேந்திரர்..
சதாசிவ பிரம்மம்...
சதாசிவ பிரம்மேந்திரர்.
 



Leave a Comment