ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அலைமோதல்.....


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறையையொட்டி ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர். இதனால் இன்று 12 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை லட்சகணக்காக இருக்கும் அதன்படி நேற்றும் (சனி) இன்றும் (ஞாயிறு) பக்தர்கள் அதிகளவு திரண்டுள்ளனர். நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 51 ஆயிரத்து 990 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இலவச தரிசனத்தில் 12 மணி நேரமும், திவ்ய தரிசனத்தில் 10 மணிநேரமும், ரூ.300க்கான டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வைகுண்டத்தில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியதால் ஏராளமான பக்தர்கள் வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. அதில் ரூ.2.51 கோடி காணிக்கையாக கிடைத்தது.



Leave a Comment