கவிஞர் வாலி ஸ்ரீ மஹா பெரியவா மீது பாடிய கவிதை...


ஆயிரத்து இருநூறு

ஆண்டுகள் முன்னம்
ஆரியாம்பாள் ஈன்றனள் — ஓர்
அழகு மதலை; அவள் –
அவ்வாறு ஈன்றெடுத்தது — அவ்
ஆதிமுதலை; அதைத்தான்
ஆதிசங்கரர் ஆக்கியது — ஓர் ஆற்று முதலை!

காலடி பிறந்தவன்
காலடி பதிந்திடாத
நாலடி — இந்த
நாட்டினில் இல்லை; திரு –
மாலடி போற்றி — அவன்

மொழிந்த பஜகோவிந்தம் போல்
நூலடியொன்று — பிற
நூலோர் ஏட்டினில் இல்லை !

‘அவன்தான் –
இவன்;
இவன்தான்
அவன்!’

எனும்படி — இங்கு
எழுந்தருளினான்….

காஞ்சி –
காமகோடி — ஸ்ரீ
சந்திர சேகரேந்திர –
சரஸ்வதி; அந்த
இமயநதிக்கு இணையான — ஒரு
சமய நதி!

துவராடை தரித்த
திருவாசகத்தை; இரு
கால்கொண்டு — ஒற்றைக்
கோல்கொண்டு — இப்
படிமிசை உலவிய — அத்வைதப்
பெருவாசகத்தை;

கயிலைநீங்கி காஞ்சிவந்த — ஞான
வெயிலை; மன்பதையின் –
அவத்தைப் போக்க
பவத்தைப் போக்க –
தவத்தைப் புரிந்த சிவத்தை;

அரிசிப் பொறி
அருந்தி –

அஞ்சு பொறி
அவித்த….

நுழைபுலம் மிக்க — ஒரு
நூற்றாண்டுக் கிழவனை; நம்
நெஞ்சை — ஒரு
நஞ்சை நிலமாக்க — விழி
நாஞ்சில் கொண்டு
நாளும் உழுத உழவனை;

அரசுமுதல் ஆண்டிவரை –
அறியும் ‘பெரியவாள்’ என்று;
அழுக்கு மனங்களில்
அப்பிக் கிடக்கும் –
அவலப் புதர்களை
அரியும் பெரிய வாள் என்று!

– கவிஞர் வாலி



Leave a Comment