அன்னையின் ஒன்பது அம்சங்கள்


 

சிவனுக்கான ஒரு ராத்திரி சிவராத்திரி. அன்னைக்கான ஒன்பது ராத்திரி நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களும் அன்னையை எந்த அம்சமாக கொண்டாடப்பட வேண்டும் என்பதைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்ளலாம்.

நவராத்திரியின் முதலாம் நாளில் நாம் சக்தித் தாயை சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்ததால், சாமுண்டா எனவும் அழைப்பர். அநீதியை காண்டு கோபம் கொள்ளும் இவளுக்கான முதல்நாள் நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல்.

 

ஒன்பது நாள் கொண்டாட்டமான நவராத்திரியின் இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களைத் தாங்கியிருக்கும் இவளுக்கான நைவேத்தியம் தயிர்ச்சாதம்.

மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இந்திரனின் சக்தியான இவள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளே. பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்கள் இவளை சரணடைய வேண்டும். இவளின் அருட்பார்வை பெற படைக்க வேண்டிய நைவேத்தியம் வெண்பொங்கல்.

சக்தியை நான்காம் நாள் அன்று வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவளான  இவளின் வாகனம் கருடன். நைவேத்தியம், எலுமிச்சை சாதம்.

ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். மகேஸ்வரனின் சக்தியான இவள், திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னைக்கு படைக்க வேண்டிய  நைவேத்தியம் புளியோதரை.

ஆறாம் நாள்  அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு இவளே ஆதாரமானவள். ஓங்கார சொரூபமான இவள், சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தரும் இவளுக்கான ஆறாம் நாள் நைவேத்தியம் தேங்காய்ச்சாதம்.

ஏழாம் நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். ஸ்ரீமன் நாராயணனின்  பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தை கொண்ட இவள், தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள்.ஏழாம் நாள் நைவேத்தியம் கற்கண்டுச் சாதம்.

எட்டாம் நாள் அன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னைக்கு படைக்க வேண்டிய நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல்.

நவராத்திரியின் ஒன்பதாம் நாள் அன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். நல்வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமான இவள்  கல்விச்செல்வம் அருள்பவள். அன்னையின் அருள் பெற படைக்க வேண்டிய நைவேத்தியம் அக்கர வடசல், சுண்டல்

 

                                                                          

இப்படி ஒன்பது நாளும் அன்னையை ஒன்பது அம்சமாக கொண்டாட,நம் இல்லத்திலும் உள்ளத்திலும் அன்னையின் அருள் நிறைந்திருக்கும்.

 



Leave a Comment