பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கல்யான திருவிழா தேரோட்டம்...!


தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஐப்பசி திருக்கல்யான திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தூத்துக்குடி சிவன் கோவில் ஐப்பசி திருக் கல்யாண திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு பாகம்பிரியாள் அம்மனுக்கு 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு தீபாராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து பாகம்பிரியாள் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தேரில் வைத்து பாகம்பிரியாள் அம்மனுக்கு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.

 இதனைத் தொடர்ந்து தேரோட்டத்தை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வடம் பிடித்து தேர் இழுத்து தொடங்கி வைத்தனர். உடன் சிவன் கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.  பூஜைகளை பிரதான பட்டர்கள் செல்வம், சுப்பிரமணி, சங்கர் சண்முகம், குரு ஆகியோர் செய்தனர்.

ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் மிக முக்கிய விழாவான திருக்கல்யாண திருவிழா நாளை மறுநாள் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.



Leave a Comment