நாம் தினமும் கவனிக்க வேண்டிய சுபஹோரை..... 


தினம்தோறும் நாம் ஒரு செயலை ஆரம்பிக்கும் பொழுது எல்லாம் வல்ல கணநாதர், ஓம் ஸ்ரீ மகா கணபதியே தொழுது செயலை துவங்குகிறோம். நாம் செய்யும் செயல் இனிதே தடையின்றி செய்வதற்கு ஒரு நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து நாம் துவங்குகிறோம்.

 நல்ல நேரம் என்பது ஒரு நாளில், சுப கோள்கள் ஆளுமை செய்யும் நேரம் ஆகும். ஒரு வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகம் ஆளுமை செய்கிறது.  ஞாயிறு, திங்கள்,  செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்ற குறிப்பிட்ட அமைப்பில் இந்த நாட்கள் வருகின்றன இன்றைய காலகட்டத்தில் நாம் அனைத்து செயல்களுக்கும் இந்த ஏழு நாட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துகின்றோம் .

இந்த நாட்களை... கிழமைகளை எவ்வாறு வகுத்துள்ளனர் ?
இன்று ஞாயிற்றுக்கிழமை என்றால் இன்றைய தினம் முழுவதும் சூரிய பகவானின் ஆளுமைக்கு உட்பட்டு இருக்கின்றது. ஆகவே இன்றைய நாள் ஞாயிற்றுக்கிழமை என்கிறோம். அதேபோல திங்கட்கிழமை என்றால் அன்றைய தினம் சந்திர பகவானின் ஆதிக்கம் முழுமையாக உள்ள நாளாகும்.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்தின் ஆளுமைக்குள் கொண்டு நமது வாழ்க்கையில் அனைத்து செயல்களும் நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள் என்பது எவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டது என்றால் நாம் சிவன் கோவிலில் பார்க்கும் நவகிரகம் ஒன்பது கிரகங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 

சூரியன், சந்திரன் ,செவ்வாய் ,புதன் ,குரு ,சுக்கிரன், சனி பகவான் ,ராகு பகவான், கேது பகவான் ஆகிய ஒன்பது கோள்களும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி அமைக்கப் பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம் . இந்த ஒன்பது கிரகங்களில் ராகு கேது கிரகங்கள் நிழல் கிரகங்கள் என்று கூறப்படுகிறது .

 

மற்ற 7 கிரகங்கள் வானமண்டலத்தில் வலமாகவும் இந்த இரண்டு நிழல் கிரகங்கள் வான மண்டலத்தில் இடமாகும் தனது சஞ்சாரத்தை செய்துகொண்டு இருக்கின்றன. இந்த ஒன்பது கிரகங்களில் ராகு கேது கிரகங்களுக்கு தனியாக ராசி கொடுக்கப்படவில்லை. ராசி மண்டலத்தில் உள்ள பன்னிரண்டு ராசிகளில் மீதமுள்ள ஏழு கிரகங்கள் தனது சொந்த வீடுகளாக கொண்டுள்ளன .இங்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் கிரகங்கள் தங்களுடைய வீட்டின் அதிபதியாக உள்ளனர்.

ஒரு நாளில் 24 மணி நேரம் உள்ளது. ஒரு நாளில்  ஒவ்வொரு மணி நேரமும் ஒரு கிரகத்தின் ஆளுமையில் இயங்குகிறது.நல்ல நேரம் என்பது சுபஹோரை என்று அழைக்கப்படுகிறது.


 சுப ஹோரை என்றால் என்ன?
ஒரு  HORA என்பது ஒரு  HOUR ஆகும். ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தை ஒவ்வொரு மணி நேரமும் நவகிரகங்களில் ராகு கேது தவிர வேறு கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட  அமைப்பில் அந்த நேரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.  இந்த சுப ஹோரை என்பது குறிப்பிட்ட வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதாவது ஞாயிற்றுக்கிழமை உள்ள 24 மணி நேரமும் இந்த வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது அதாவது முதலாவது காலை 6 மணி முதல் 7 மணி வரை சூரிய ஹோரை. பின்னர் ஒரு மணி நேரத்திற்கு சுக்கிர ஹோரை என்று வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது .


 ஞாயிற்றுக்கிழமை வரும் வரிசை :
சூரியன், சுக்கிரன் ,புதன் ,சந்திரன் ,சனி பகவான், குரு பகவான் ,செவ்வாய் இவை ஏழு ஹோரைகள் .ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் ஏழு மணிநேரம் இந்த வரிசையில் ஹோரை வரும். அதற்குப் பின்னர் இதே வரிசையில் அடுத்து 7 மணி நேரம் அதாவது மதியம் ஒரு மணி முதல் 8 மணி வரை சுப ஹோரை வரும் .

பின்னர் இரவு 8 மணி முதல் அடுத்த நாள் காலை 3 மணி வரை இந்த வரிசை தொடரும். பின்னர் சூரியன் ,சுக்கிரன் ,புதன் ஓரைகள் காலை 3 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மூன்று  சுப ஹோரைகள் முடிந்து திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை சந்திர ஹோரை ஆரம்பமாகும் .இதுதான் ஒருநாளில் உள்ள ஹோரையின் அமைப்பு ஆகும் இவ்வாறு ஏழு நாட்களும்  சுபஹோரை கணிக்கப்படுகிறது.

காலையில் 6 மணி முதல் 7 மணி வரை எந்த சுப ஹோரை ஆரம்பம்  ஆகிறதோ அந்த நாளின் பெயர்  கொண்டு கிழமை அமைகிறது. இவ்வாறுதான் ஒரு வாரத்தில் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி என்ற கிழமைஅமைப்பு நமது முன்னோர்களால் கொடுக்கப்பட்டுள்ளது .


சூரிய உதயம் ஒரு இடத்தில் காலை 6 மணி என்ற முறையில் சுபஹோரை கணிக்கப்பட்டுள்ளது ஒரு இடத்தின் சூரிய உதயத்தை கொண்டு இந்த முறையின் கால அளவு சிறிது மாறுபடும். சந்திரன் ,புதன் ,குரு, சுக்கிரன் ஆகிய சுப ஹோரைகள் ....நல்ல செயல்களை செய்வதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மீதமுள்ள  மூன்று  ஹோரைகள் சூரியன் ,செவ்வாய், சனி ஆகிய கிரகங்களின்  ஹோரைகளை  நல்ல செயல்கள் செய்வதற்கு தவிர்க்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை உள்ள சுப ஓரையில் மருந்து உண்ண , பெரியோரை பேட்டி காண ,பிரயாணம் செய்ய ஆகிய சுப செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் . திங்கட்கிழமை அன்று உள்ள சுப ஹோரையில் புது நகை வாங்கவும் புதிய ஆடை உடுத்தவும், புதிய கடை திறக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம் .

செவ்வாய்க்கிழமை அன்று உள்ள சுப ஓரையில் ஆப்பரேஷன் சிகிச்சை செய்ய ,ஆயுதம் செய்ய ,இயந்திரம் தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

 புதன் கிழமையில் வரும் சுப ஓரையில் கலை பயில, கணித ஆரம்பம் செய்ய ,பொன் உருக்க ,,வித்தியாரம்பம் செய்ய, நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 வியாழக்கிழமை வரும் சுப ஓரையில் பெரியோரை காண்பதற்கும், வாங்கிய கடன் தீர்ப்பதற்கும் ,புதிய வஸ்திரம் வாங்குவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 வெள்ளிக்கிழமையில் வரும்    சுப ஓரையில் புதிய தொழில் செய்வதற்கும், சுபமான செயல்களை பேசுவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 சனிக்கிழமை வரும்  சுப ஓரையில்ஆயுதம் பழகுவதற்கும், யாத்திரை செல்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 


தொகுத்தவர் :  ஜோதிடர் பிரேம்குமார் . M.G.online astrologer. 



Leave a Comment