ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம்


இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு நாளை 10.04.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஹோமம், அபிஷேகம், பாராயணம், அர்ச்சனை, மஹாதீபாராதனை போன்றவைகள் இழந்த பதவி கிடைக்கவும், துன்பங்கள் நீங்கவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் பிரார்த்தனை நடைபெற உள்ளது

ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி என்பதாகும். தீபாவளி போலவே இந்தியா முழுவதும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமே ஸ்ரீராமர். ஸ்ரீராமர் அவதாரமாகவே இருந்தபோதும், மனிதனாகப் பிறப்பெடுத்ததால் நல்வினை, தீவினைகளுக்கேற்ப கஷ்டங்களை அனுபவித்தும், ஏகபத்தினி விரதனாக உலகிற்கு வாழ்ந்து காட்டியவர். பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஸ்ரீராம பிரான். ராமபிரான் அவதரித்த நாளே 'ராமநவமி' கொண்டாடப்படுகிறது.

பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம். ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு ஸ்ரீராமர், சீதாலக்ஷ்மி, லக்ஷ்மணர், பரதன், சத்ருக்னன், ஈஸ்வரர், கணபதி, ஆஞ்சநேயர், வசிஷ்டர், பிரம்மா போன்ற 14 தெய்வங்களுடன் ஒரே கல்லில் காட்சித்தரும் ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீராமர் ஹோமத்துடன் 16 வகையான திரவியங்களைக் கொண்டு விசேஷ திருமஞ்சனமும் இதனைத் தொடர்ந்து துளசி மாலை, பழங்கள், வெற்றிலை, பூ இவைகளை கொண்டு ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு திவ்ய நாம அர்ச்சனையும் மேலும் வடை, பருப்பு, எலுமிச்சம் பழம், புளி, வெல்லம் இவற்றைக் கொண்டு பானகம், நீர்மோர், பஞ்சாமிர்தம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகியவை நிவேதனமாக சமர்ப்பிக்கப்பட உள்ளது பின்னர் நைவேத்யப் பொருட்களைக் குழந்தைகளுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது 

இந்நாளில் ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும், குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலவும், நாடியப் பொருட்கள் கைகூடவும். இழந்த பதவி மீண்டும் கிடைக்கவும், துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெறலாம் என்பது ஐதீகம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



Leave a Comment