திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிவலம் செல்ல அனுமதி


திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் தொடங்கியபோது கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால், திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு 2020-ம் ஆண்டு பங்குனி மாதம் முதன் முறையாக தடை விதிக்கப்பட்டது. 

இதையடுத்து ஒவ்வொரு மாதமும் கிரிவலம் செல்ல விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. மேலும் கிரிவலம் செல்ல முயலும் பக்தர்களை தடுக்க, கிரிவலப் பாதையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு வந்தனர். ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கிரிவலம் மீதான தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருந்தது.

இந்நிலையில் தொற்று வெகுவாக குறைந்து தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில், பவுர்ணமி கிரிவலத்துக்கு கடந்த 2 ஆண்டுகளாக விதிக்கப்பட்டு வந்த தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து ஆட்சயிர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ''கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, பவுர்ணமி கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அரசு தெரிவிக்கப்பட்டுள்ள கரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள், பவுர்ணமி கிரிவலம் செல்லலாம்.

மார்ச் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கிரிவலம் செல்லும் பக்தர்கள் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்'' என தெரிவித்துள்ளார். கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், சிறப்புப் பேருந்துகளை இயக்குவது குறித்து அரசு போக்குவரத்துக் கழகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
 



Leave a Comment