திருமணத்திற்கு ஜாதகங்களை எந்தெந்த நாட்களில் பதியலாம்..... 


முதன் முதலில் ஜாதகங்களை எடுக்கவும் , கொடுக்கவும் உகந்த நாள் வளரபிறை திருதியை திதி உகந்த நாளாகும். திருதியையில் எந்த காரியம் தொடங்கினாலும் விருத்தியாகும் என்பது முன்னோர் வாக்கு. நட்சத்திரங்களில் மிகவும் சிறந்த உத்தமமான நட்சத்திரம் மூலம் நட்சத்திரமாகும். மூலம் நட்சத்திர நாளில் எல்லா நல்ல காரியங்களையும் துவங்களாம்.

செம்பருத்தி பூவினாலோ அருகம் புல்லினாலோ விநாயகருக்கு மாலை கட்டி வணங்கினால் மூலம் நட்சத்திர நாளில் செய்யும் நல்ல காரியங்கள் வெற்றியைத் தரும். திருமண தடங்கல்கள் பல காரணங்களால் நிகழும். மற்றவர்களை பற்றி தவறான தகவல்களை கூறி அவர்களின் திருமணத்தை நீங்கள் தடுத்தீர்களேயானால் பின்னர் உங்கள் வீட்டுத் திருமணம் தடைபடும்.

ஆகவே யாருடைய திருமணத்தையும் தடுக்காதீர்கள். மற்றவருக்கு உபகாரம் இல்லாவிடிலும் உபத்திரம் இல்லாமல் பார்த்துக் கொள்வது உங்களுக்கும் உங்கள் வாரிசுகளுக்கும் நல்லது. இதுபோல பல காரணங்களால் திருமணம் தடைபடும். இதற்கு நிவர்த்தி பரிகாரம் , அசோகப் பூவினை பறித்து அரசும்( அரசமரம்) , வேம்பும் பின்னி வளர்ந்த மரத்திற்கு அடியில் உள்ள விநாயகருக்கு மாலையாக அணிவித்து அர்ச்சித்து வணங்கி திருமண வேலைகளை தொடங்கினால் திருமண தடங்கல் நீங்கும்.

செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகங்களை அவிட்டம் நட்சத்திரமன்று முருகப் பெருமானின் பாதத்தில் வைத்து அகத்திப் பூவால் அர்சித்து திருமண வேலைகளை தொடங்குதல் மிக்க நலம். சனி தோஷம் உள்ள ஜாதகங்களை பூசம் நட்சத்திர நாளன்று ஸ்ரீரங்கநாதர் அல்லது அநந்த பதமநாத சுவாமியின் பாதத்தில் வைத்து சாமந்திப் பூவால் அர்சித்து வணங்கி திருமண வேலைகளை தொடங்கினால் மிக எளிதாக திருமணம் நடைபெறும்.

குரு தோஷம் உள்ள ஜாதகங்களை புனர்பூசம் நட்சத்திர நாளன்று ஸ்ரீரங்கநாதர் அல்லது அநந்த பதமநாத சுவாமியின் பாதத்தில் தங்கள் ஜாதகங்களை  வைத்து  வணங்கி திருமண வேலைகளை தொடங்கினால் மிக எளிதாக திருமணம் நடைபெறும்.

ராகு கேது தோஷம்(நாக தோஷம் , சர்ப்ப தோஷம்) உள்ளவர்கள் முறையாக குல தெய்வ பூஜை செய்து  வேப்பம் பூவினை சக்தி பீஜ மந்திரம் ஜெபித்து இடது கையில் வைத்து வலது கையால் மூடிக் கொண்டு ஓடும் நீரிலோ அல்லது கும்பாபிஷேகம் செய்த தீர்த்தத்திலோ விட்டு சக்தி பீடங்களில் வைத்து வழிபட்டு திருமண வேலைகளை தொடங்கினால் அதிவிரைவாக திருமணம் நடைபெறும்.

சூரிய தோஷம் உள்ள ஜாதகங்களை அஸ்வினி நட்சத்திர நாளன்று  சூரியகாந்தி பூவினை சூரிய பகவானின் வலது தோளிலும் , இடது தோளிலும்வைத்து வணங்கி , சூரிய பகவானின் பாதத்தில் அந்த ஜாதகத்தை வைத்து வணங்கி திருமண வேலைகளை தொடங்கினால் மிக எளிதாக காரியம் சித்தியாகும்.
 



Leave a Comment