ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் சொரூபமாகத் திகழும் விநாயகப்பெருமான்


உலகத்தின் தோற்றத்திற்கும், ஒடுக்கத்துக்கும் "ஓம்' என்ற பிரணவ மந்திரமே காரணமாகும். அப்பேர்பட்ட பிரணவ மந்திர சொரூபமாகத் திகழ்பவர் விநாயகப்பெருமான்.  முழுமுதற் கடவுளான அவரை எண்ணிச் செய்யப்படும் எந்த செயலும் உலக நன்மையையும், ஆன்மீக பலத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கவல்லது. இந்த மகாகணபதியை மூலப்பரம் பொருளாகவே பாவித்து வழிபடுவது என்பது வேதகாலத்தில் இருந்தே தொடர்ந்து வரும் மரபு.

ஆதிசங்கரர் வகுத்த ஷண்மத வழிபாட்டு முறைகளில் "காணாபத்தியம்' எனப்படும் கணபதி வழிபாடே முதன்மை வகிக்கின்றது. விநாயகர் தோன்றிய வரலாற்றினையும், நரமுக கணபதியான அவர் கஜமுக கணபதியான வரலாற்றினையும் புராணங்கள் பல்வேறுவிதமாக விவரிக்கின்றன. சுருங்கக்கூறின், அற்புதங்கள் பல நிறைந்தது.  அவரது அவதாரம். ஆதியிலும் அந்தத்திலும் விளங்கியதால் ஆதியந்தமற்ற பரபிரம்ஹ ஸ்வரூபமாக இவரை, "ஜ்யேஷ்டராஜன்' (மூத்தவர்) என்று வேதங்கள் அழைக்கின்றன. கணங்களுக்கெல்லாம் தலைவரானதால் கணபதி எனவும் மேலான தலைவர் என்பதால் விநாயகர் எனவும், தடைகளை நீக்குவதால் விக்னேஸ்வரர் எனவும் பல பெயர்கள் உடையவரானார். 

சிவபெருமானுடைய பிள்ளையானதால் மரியாதையாகப் பிள்ளையார் என்று கூறுகின்றோம்.
விநாயகரின் திரு உருவத்தில் பல தெய்வங்கள் உறைகின்றனர். அவரது நாபி பிரம்ம சொரூபத்தையும், 
முகம் விஷ்ணு சொரூபத்தையும், இடப்பாகம் சக்தி வடிவையும், வலப்பாகம் சூரியனையும், முக்கண்கள் சிவசொரூபத்தையும் குறிக்கின்றன. 


ஜீவனுக்கும், பிரம்மத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்தும் விதமாக மனித வடிவத்தில் ஜீவாத்மாவையும், கஜ வடிவத்தில் பிரம்ம சுவரூபத்தையும் இணைத்துக்கொண்டு அற்புதமாக அவர் காட்சி தருகின்றார்.

ஒளவைப்பிராட்டியார் தனது விநாயகர் அகவலில் "தத்துவ நிலையைத் தந்து எனையாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே!' என அருளிச்செய்ததை இத்தருணத்தில் நினைவிற் கொள்வது சாலச்சிறந்தது. கணபதியை சகலதேவதைகளும் ஆராதித்து தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டுள்ளனர்  என இதிகாச புராணங்கள் கூறுகின்றன. முப்புரங்களைப் பொசுக்கப்புறப்பட்ட பரமேஸ்வரனுடைய தேரின் அச்சு முறிந்தபோது விநாயகர் துஷ்டி, புஷ்டி என்ற தேவதைகளை வைத்து தேர் சீர் குலைந்து போகாமல் செப்பனிட்டுக் கொடுத்தார். "அச்சது பொடிசெய்த அதிதீரா' என்பார் அருணகிரியார். பண்டாசுரனுடைய கோட்டையைத் தகர்த்து எரித்து அவன் வதத்திற்கு ஸ்ரீலலிதாம்பிகைக்கு உதவி புரிந்தவர் விக்னேஸ்வரர். 

திருமால் கண்ணனாக அவதரித்த தருணத்தில், கிடைப்பதற்கரிய சியமந்தக மணியை சத்ராஜித் என்ற மன்னனைக் கொன்று அபகரித்தார் என்ற அவப்பெயர் அவருக்கு ஏற்பட்டது. நாரதர் அறிவுறுத்தியபடி கிருஷ்ணரும் விரதமிருந்து விநாயகப்பெருமானை சதுர்த்தி திதியில் பூஜித்து தனக்கு ஏற்பட்ட சங்கடம் நீங்கப்பெற்றார்.

முருகனுக்கு வள்ளியைத் திருமணம் புரிவதில் உறுதுணையாக இருந்ததும் விநாயகப் பெருமானே.  சந்திரன் தனக்கு ஏற்பட்ட களங்கத்தை விநாயகர் அருளால் நீங்கப்பெற்றான். அகத்தியப்பெருமானின் கமண்டலத்தில் அடங்கியிருந்த காவிரியை காகத்தின் வடிவில் தென்னாட்டிற்கு அளித்தவர் கணநாதர். இதன் மூலம் அகத்தியருக்கும் அருள்புரிந்தார். 
 



Leave a Comment