துரியோதனனை ஏன் தடுக்க வில்லை கிருஷ்ணன் ?


 

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே,அவருடன் இருந்து ,அந்த அவதாரம் முடியும் மட்டும் இறுதி வரை அவருடனே இருந்தவர் உத்தவர். பகவானே தன்னுடைய பால்ய நண்பராக  இருந்த போதிலும்,தனது வாழ்நாளில், தனக்கென எந்தவிதமான உதவியோ நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.

துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில்,உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர்,“உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர்,என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.ஆனால், என் நண்பனான நீங்கள் இதுவரை என்னிடம் எதுவுமே கேட்டதில்லை. உங்களுக்கு நான் ஏதாவது தர விரும்புகிறேன், என்ன வேண்டுமோ தருகிறேன் கேளுங்கள்”என்றார்..

சிறு வயது முதலே கண்ணனுடன் நெருங்கி பழகி வந்த காரணத்தினால்,அவரின்  செயல்களை உற்று கவனித்து வந்த உத்தவருக்கு,பல நேரங்களில் கண்ணனின் லீலைகள்,புரியாத புதிராகவே இறுதிவரை இருந்தன.

அவற்றுக்கான தனக்கு புரியாத காரண காரியங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார். “பெருமானே ! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு ! நடந்து முடிந்த மகாபாரத நாடகத்தில்,எனக்குப் புரியாத பல விஷயங்கள்  உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன் என்றார் உத்தவர்.

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: “ கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். ஆபத்பாந்தவனான உன்னை , கடைசி வரை பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பவை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் முன் கூட்டியே நன்கறிந்த ஞானியான நீ முன்னதாகவே சென்று, ‘தருமா!  வேண்டாம்இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன்அப்படிச் செய்யவில்லை?

போகட்டும்.விளையாட ஆரம்பித்ததும்,தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி பாடம் புகட்டியிருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தோடு ,நாட்டை,தன்னையும் இழந்தான். அதோடு நில்லாமல் தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.'

குல தேவதையான திரௌபதியை  பணயம் வைத்து ஆட முற்பட்ட போதாவது உனது தெய்வீக சக்தியால்,அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை.மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போது தான் சென்று,திரௌபதி மானம் காத்தேன்’ ஆடை தந்தேன், என்று ஜம்பமாக மார்தட்டிக் கொண்டாய்.

மாற்றான் ஒருவன்,குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, மானம் என்ன அவளிடம் இருக்கிறது? அவள் அப்போதே இறந்து விட்டாள் உயிர் மட்டுமே ஊசலாடியது,

ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன்?ஆபத்தான இது போன்ற சமயத்தில் உன் பக்தர்களுக்கு உதவாத, நீ எப்படி ஆபத்பாந்தவன் ? நீ செய்தது நியாயமா!தருமமா ?”என்று மிகக் கடுமையாக குரலில் குழம்பிய மன நிலையில் கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

பகவான் சிரித்தார். “உத்தவரே ! விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை.அதனால்தான் தருமன் தோற்றான்”என்றான் கண்ணன்.

உத்தவர் ஏதும் புரியாது அதிர்ச்சியுடன் திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான். “துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன்.

அது விவேகம்.

தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்' என்று சொல்லியிருக்கலாமே

சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள் ?நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது அவன் கேட்கும் எண்ணிக்கைளை ,என்னால்தான் போடமுடியாதா ?

தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டதோடு, விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். 'ஐயோ ! விதி வசத்தால் சூதாட ஒப்புக் கொண்டேனே !ஆனால், இந்த விஷயம்  கண்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே !அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறுஅவனே என்னை  தன் வேண்டுதலால் கட்டிப் போட்டு விட்டான்.

யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் வெகு நேரமாக காத்து நின்றேன். பீமனையும், அர்ஜுனனையும், நகுல-சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும்,தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே !

துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளும் தனது  பலத்தையே நம்பி, சபையில் வந்து வீண் வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய,  என்னைக் கடைசி வரை கூப்பிடவேயில்லை ! நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி...  ஹரி...  அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல் கொடுத்தாள். அப்போது தான் உள்ளே செல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

 

                                                                      

இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.

“அப்படியானால், கூப்பிட்டால் தான் நீ வருவாயா ? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில், கஷ்டங்களில் உதவ உன் அடியவர்களுக்கு வரமாட்டாயா ?" என்றார் உத்தவர்.

“உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை;அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம் மட்டுமே, நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே !அது தான் தெய்வ தர்மம்" என்றான் கண்ணன்.

அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்ட இருக்க  வேண்டும்.அப்படித்தானே?"என்றார் உத்தவர்.

“உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நீங்கள் நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக உங்கள் அருகில் நிற்பதை நீங்கள் மனப்பூர்வமாக உண்மையில் உணரும் போது மட்டும் தான் உங்களால் தவறுகளையோ, தீவினை செயல்களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்து விடும் போதுதான்,எனக்குத் தெரியாமல் இது அது என ஏதாவது தீவினையை நான் உங்களுள் இருப்பதை மறைத்து எதையாவது செய்து விடலாம் என்று எண்ணி நீங்களாகவே முடிவெடுத்து செய்கிறீர்கள்.

பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் பெரும்பாலும் தவறாக நிகழ்வதும் அப்போதுதான்.எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே,அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால்,இந்த சூதாட்டநிகழ்ச்சி வேறு விதமாக  முடிந்திருக்கும் அல்லவா?" என்றான்,ஸ்ரீகிருஷ்ணன்.

உண்மை தானே ,பகவான் நாம் செய்யும் எல்லா செயல்களுக்கும்,அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை உணர்ந்தாலே, பாவங்களை செய்யாமல் இருப்போம்.



Leave a Comment